லேக்கியம் விற்பவன் ஒருவன் கடையைப் பரப்பிக் கொண்டே உரக்கப் பேசி கூட்டம் சேர்க்கத் தொடங்குகிறான். அவன் பேசப் பேச சிறு கூட்டம் கூடுகிறது.
லேக்கியம் விற்பவன்: வாங்கோ வாங்கோ வாங்கோ
அய்யா வாங்கோ ... அம்மா வாங்கோ
இங்க வாங்கோ ... இப்படி வாங்கோ
எட்டிப் பாருங்கோ ... சும்மா பாருங்கோ
பாக்க காசில்லே ... கேக்க காசில்லே
அய்யா வாங்கோ ... அம்மா வாங்கோ
பாக்க காசில்லே ... கேக்க காசில்லே
வாங்கோ வாங்கோ வாங்கோ
வாங்கிப் பாருங்கோ
ஒருக்கா
வாங்கிப் பாருங்கோ
இங்கே பாருங்கோ இங்கே பாருங்கோ
இதப் பாருங்கோ இதப் பாருங்கோ
கூவாக் குயில் சூரணம் ... கூவாக் குயில் சூரணம்
அபூர்வக் குயிலுங்கோ
அதிசயக் குயிலுங்கோ
கூவாக் குயிலுங்கோ
ஆயிரத்துல ஒன்னுங்கோ
ஆயிரத்துல ஒன்னுங்கோ
பொறி வச்சுப் புடிச்சதுங்கோ
பொறி வச்சுப் புடிச்சதுங்கோ
கூவாக் குயில் கழுத்த வெடுக்குனு திருகி
கசிஞ்ச ரத்தம்
கருநெல்லி கருத்த நொச்சி கருத்த வாழை கரிய வேலி
செங்கள்ளி செம்மல்லி சிவந்த கற்றாழை
ஆனான கற்பக மூலிகை ஏழுங் குழச்சி
நாயுருவி நெருஞ்சி நந்தியாவட்டை கலந்து
மூனு மண்டலம் முப்பது சாண் ஆழம்
பொதிச்சு வச்ச பாதி சுட்ட பானையில
சொதி ஊறி செஞ்ச சூரணம்
சொதி ஊறி செஞ்ச சூரணம்
கூவாக் குயில் சூரணம் கூவாக் குயில் சூரணம்
ஒரு மண்டலம் ஒரே மண்டலம்
வெந்நீ குடிச்சு மலசலம் கழிச்சு
வெத்து வயித்துல ஒரு மண்டலம்
ஒரே மண்டலம்
ஒரே குடுவ
குரலு வளம் ஓகோன்னு ஒசந்துடும் சார்
ஜேசுதாசோடவே போட்டி போட்டு பாடலாம் சார் நீங்க
உங்க வீட்டுக்கார அம்மாவுக்கு வாங்கி குடுங்கோ சார்
வீட்டுக்கார அம்மா இதக் குடிச்சிட்டு பாட வேணா
பேசுனாலே போதும் சார் பேசுனாலே போதும்
ஜானகியம்மா பிச்ச கேப்பாங்க சார்
கூவாக் குயில் சூரணம் ... கூவாக் குயில் சூரணம்
இங்கே பாருங்கோ இதப் பாருங்கோ
அகத்தி, அத்தி, அலரி, அவுரி
அறுகு, ஆவாரை, ஆமணக்கு, ஆடுதின்னாப்பாலை
பட்டிப்பூ, பழம்பாசி, பிரண்டை, பவளமல்லி
முசுட்டை, மொசுமொசுக்கை, முடக்கொத்தான், முத்தாமணக்கு
பதினாரு பெருமூலிகை சேத்து
நாலு மண்டலம் நாற்பது சாண் ஆழம்
பொதிச்சு வச்சு
நொதிச்ச சாறெடுத்து
நாலு மடங்கு அக்மார்க் தேங்காயெண்ணெயில கலந்து
அக்மார்க் தேங்காயெண்ணெய்
நாலு நாள் நாலு பானையில
ஒரு மடங்கா சுண்டக் காய்ச்சி
எடுத்த தைலம் சார் எடுத்த தைலம்
கேசபோஷிணி கேசபோஷிணி
சார் தலயப் பாருங்கோ
சும்மா பளபளன்னு ஷைனிங் அடிக்குது
பளபளன்னு ஷைனிங் அடிக்குது
ஒரு மண்டலம் ஒரே மண்டலம்
உச்சந்தலையில ஒரு சொட்டு வச்சு
காத்தால ஆறுமணிக்கு சூரியன் வெளிய வர்றப்போ
ஒரு மணிநேரம் மொட்ட மாடியில நில்லுங்கோ
மொட்ட மாடியில நில்லுங்கோ
கொட்டுன மசுரெல்லாம் முளைச்சுடும் சார்
கொட்டுன மசுரெல்லாம் முளைச்சுடும்
கேசபோஷிணி தைலம் கேசபோஷிணி தைலம்
இங்கே பாருங்கோ இதப் பாருங்கோ
கடுக்கா கடுக்கா கடுக்கா
கடுக்கா லேக்கியம் கடுக்கா லேக்கியம்
கடிக்க இல்லே முழுங்க இல்ல
ஊற வச்சு குடிக்கோனும் ஊற வச்சு குடிக்கோனும்
ஏழ – பாழைக்கு வெந்நீ
சம்சாரிக்கு பாலு
சுகவாசிக்கு தேனு
ஊற வச்சு குடிக்கோனும் ஊற வச்சு குடிக்கோனும்
இருக்கறதுலேயே இதுதான் சீப் ... ஒன்னு அம்பது ரூபா ...
அம்பதே ரூபா ...
லேக்கியம் விற்பவனை வேடிக்கை பார்க்கக் கூடும் சிறு கூட்டத்திலிருந்து ஒருவர் ...
நபர் 1: என்னாப்பா வெறும் கடுக்காவ காமிச்சு லேக்கியம்னு சொல்றே ...
லே. வி: சார் ... இன்னா சார் அப்படி சொல்லிட்டே ...வெறும் கடுக்கா
இல்ல சார் ... ஊறவச்ச கடுக்கா ... ஊறவச்ச கடுக்கா ...
நாப்பத்தெட்டு மூலிகைய கசக்கிப் பிழிஞ்சி, சாறெடுத்து
ஊறவச்சு, ஒரு மண்டலம் கழுகு மல உச்சிப் பாறையில காக்கா குருவி ஓட்டி காய வச்சு எடுத்த கடுக்கா சார் ... எங்க பரம்பரை ரகசியம் ... என் முப்பாட்டன் காலத்துலே இருந்து எங்க குடும்ப ரகசியம் சார் ... வெள்ளக்காரனுக்கே கடுக்கா கொடுத்த பரம்பரை சார் எங்க பரம்பரை ... சொன்னா பொழப்பு கெட்டுடும் சார் ... பொழப்பு கெட்டுடும் ... வெறும் கடுக்கா இல்ல சார் இது ... விசேஷமான கடுக்கா ...
நபர் 2: இன்னா விசேஷம் பா அதுல ?
லே. வி: அதக் கேளு சார் சொல்றேன் ... அதக் கேளு சார் சொல்றேன் ... ஆசையா அருமையா பெத்த புள்ளைங்க படிச்சு பெரிய ஆளா வரணும்னு கனவு காணுற ஏழ பாழைங்க வாயக்கட்டி வயித்தக்கட்டி கவெர்மெண்டு ஸ்கூல்ல புள்ளைகள சேக்குதுங்க. வீட்டுக்கார அம்மாவோட, முன்னால ஒரு பையன் பின்னால ஒரு பொண்ண வச்சு பாத்துப் பாத்து வண்டியோட்டுற டூவிலர் சார் தம் புள்ளைங்கள மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல சேக்குறார். டிப் டாப்பா ட்ரெஸ் போட்டு ... அதோ கார்ல போற அய்யா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்த பொண்ண சர்ச் பார்க்குல சேத்து படிக்க வக்குறார்; டான்ஸ் க்ளாஸுக்கு அனுப்பி வக்குறார்; டென்னிஸ் கோச்சிங்குக்கும் அனுப்பி வைக்கிறார். மூனு வேள சோத்த முழுசா தின்ன நாளு முழுக்க நாயா பாடுபடுற நாதியத்த குடிசை வாசிங்க, புள்ளைங்க நாலு வார்த்த எழுதப் படிக்க தெரிஞ்சா போதும்னு கார்ப்பரேஷன் ஸ்கூலுக்கு துரத்தி வுடுதுங்க. எல்லா பள்ளிக் கூடத்திலயும் ஒரே மாதிரிதான் பாடம் சொல்லிக் குடுக்குறாங்களா சார் ... சொல்லு சார் ...
நபர் 3: அதெல்லாம் தெரியும்யா ... அதுக்கும் உன் லேக்கியத்துக்கும் என்னா சம்பந்தம் ... ?
லே. வி: அவசரப் படாத சார் ... அவசரப் படாத ... என் லேக்கியத்தோட அருமைய தெரிஞ்சுக்கனும்னா இதையெல்லாம் சொல்லித்தான் சார் சொல்லோனும் ... சொல்லித்தான் சொல்லோனும்
நபர் 4: சொல்லு சொல்லு ... சட்டு புட்டுன்னு சொல்லு ...
லே. வி: சார் ... கவர்மெண்டு ஸ்கூல்ல படிக்குற ஆட்டோ டிரைவர் புள்ளயும், கான்வெண்டுக்கு தினமும் கார்ல போய் இறங்குற புள்ளயும் ஒரே மாதிரி படிக்குமா சார். கார்ல காண்வெண்டுக்கு போற புள்ள இங்கிலீஷுல பிச்சு உதறும் சார். சார் வூட்டு புள்ள ...? (சுற்றி நிற்கும் ஒருவரை நோக்கி) பையனா பொண்ணா சார்?
நபர் 5: பொண்ணு ... ரெண்டு பொண்ணு ...
லே. வி: பாருங்க சாருக்கு ரெண்டு பொண்ணுங்க ... பொம்பளப் புள்ளைங்க நல்லா படிச்சு முன்னேற்ர காலம் சார் இது ... சார் வூட்டுப் புள்ளைங்க ... (அதே நபரைப் பார்த்து) கான்வெண்டுல படிகுதுங்களா சார்?
நபர் 5: (பதில் இல்லை)
லே. வி: பாருங்க ... சார் கூச்சப்படறார் ... சாரப் பாத்தா சாதாரண சம்சாரி மாதிரி தெரியுது ... சாரால பொண்ணுங்கள கான்வெண்டுக்கு அனுப்ப முடியுமா? நான் அனுப்ப முடியுமா? (இன்னொருவரை நோக்கி) நீங்க அனுப்ப முடியுமா சார்? ... (அமைதி) சராசரி சம்சாரி வீட்டுப் புள்ளைங்க படிக்குற கவெர்மெண்டு ஸ்கூலும் கான்வெண்டும் ஒன்னா சார் ... ரெண்டுல படிக்குற புள்ளைங்களும் ஒரே மாதிரியாவா படிக்குது ... சொல்லு சார் ...
நபர் 1: அதுதான் தெரிஞ்ச விஷமாச்சேய்யா ... அதுக்கு உன் லேக்கியம் என்ன செய்யப் போவுது?
நபர் 2: யோவ் ... இவன் சுத்தி சுத்தி பேசி கடுக்கா கொடுக்கப் பாக்குறான்யா ...
லே. வி: சார் சார் ... என் கடுக்காவப் பத்தி தப்பா பேசாத சார் ... பொறுமையா கேளு சார் ... பொறுமையா கேளு ... சார் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிக்குற புள்ளைங்களுக்கும் கான்வெண்டு புள்ளைகளுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது சார் ... ஏணி வச்சாலும் எட்டாது ... சம்சாரி புள்ளைக்கும் சுகவாசி புள்ளைக்கும் ஒரே மாதிரி படிப்பு கிடையாது ... கவர்மெண்டு ஏழை பாழைங்களுக்கு கொடுக்குற கடுக்காவ இந்த சாரும் வாங்கிக்குறாரு அந்த சாரும் வாங்கிக்கிறாரு சம்சாரியும் வாங்கிக்குறார் ஏழை பாழைங்களும் வாங்கிக்குது ... சரிதானே சார் ... என் கடுக்காவ வாங்கிப் பார் சார் ... கார்ப்பரேஷனுக்கு கான்வெண்ட எட்ட வைக்கும் சார் ...
நபர் 3: எப்படிய்யா ... கார்ப்பரேஷனுக்கும் கான்வெண்டுக்கும் உன் கடுக்கா ஏணி போடுமா?
லே. வி: இன்னா சார் என்கிட்டவே நக்கலா ... சார் ... கவர்மெண்டால செய்ய முடியாத காரியத்தை என் கடுக்கா செய்யும் சார் ... என் கடுக்கா லேக்கியம் செய்யும் ... ஆதாரம் வேணுமா சார் ... சாட்சி வேணுமா சார் ...
நபர் 4: என்னய்யா ஆதாரம் வச்சிருக்க ... என்ன சாட்சி ... காட்டு ...
லே. வி: மனசாட்சிய வக்கிறேன் சார் ...
நபர் 1: என்னய்யா மனசாட்சி ... சாட்சிய காமி ... நா வாங்குறேன் உன் கடுக்காவ ...
லே. வி: சாட்சிய காட்டுனா வாங்கிக்குவியா சார் ... அப்புறம் பேக் அடிக்கக்கூடாது ...
நபர் 1: பேக் அடிக்கல்லை ஃப்ரெண்டும் அடிக்கல்லே ... மொதல்ல சாட்சியக் காமி
லே. வி: காமிக்கிறேன் சார் காமிக்கிறேன் சார் ... முதல்ல என் கடுக்காவோட அருமையச் சொல்றேன் கேளுங்க சார் ...
இந்த கடுக்காவ சாப்பிட்ட புள்ளைங்க பிச்சு உதறுதுங்க சார் ... இங்கிலீஷுல பிச்சு உதறுதுங்க ... கான்வெண்டு பசங்கள பிச்ச வாங்க வக்குதுங்க சார் படிப்புல ... பிச்ச வாங்க வக்குதுங்க ... கவர்மெண்ட்டு சாதிக்காத காரியத்தை என் கடுக்கா லேக்கியம் சாதிச்சிருக்கு சார் ... என் கடுக்கா லேக்கியம் சாதிச்சிருக்கு ...
நபர் 2: அப்படி என்னய்யா சாதிச்சிருக்கு ?
லே. வி: பணக்காரன், ஏழ, சம்சாரின்னு பாரபட்சம் இல்லாம எல்லாரையும் உசத்தி விட்டிருக்கு சார் ... எல்லாரையும் உசத்தி விட்டுருக்கு ...
நபர் 3: என்ன எல்லாரும் ப்ளேன்ல பறந்தாங்களா ... இல்ல சிவலோகத்துக்கு உசத்தி விட்டுருச்சா?
லே. வி: சிவலோகத்தை இங்க வரவழைச்சிருக்கு சார் ... இங்க வரவழைச்சிருக்கு ...
நபர் 4: ஏ ... திருவிளையாடல் படத்த சொல்றாருப்பா ...
லே. வி: திருவிளையாடல்தான் சார் ... திருவிளையாடலே தான் ... ஆனா படம் இல்ல சார் ... மாயம் இல்லே சார் மந்திரம் இல்லே சார் தந்திரம் இல்லே சார் ... மூலிகை மருத்துவம் சார் ... மூலிகை மருத்துவம் ...
ஒரே லேக்கியம் ... ஏழ – பாழ, சம்சாரி, சுகவாசி மூனு பேருக்கும் ஒரே லேக்கியம் ...
ஏழ – பாழ ஒரு மாதிரி, சம்சாரி ஒருமாதிரி, சுகவாசி ஒருமாதிரி ... மூனு பேரும் ஒவ்வொரு மாதிரி எடுத்துக்கோனும் ... ஒவ்வொரு மாதிரி எடுத்துக்கோனும் ... ஒரே லேக்கியம் ...
நபர் 5: எல்லாரும் வாயாலதான எடுத்துக்கனும் ...
லே. வி: நாக்குல நரம்பில்லாம பேசாத சார் ... நரம்பில்லாம பேசாத ... சுகவாசி கிட்டே பணம் கொட்டிக் கெடக்கு சார் ... பணம் கொட்டிக் கிடக்கு ... அவங்க வீட்டுப் புள்ளைங்கோ இந்த கடுக்காவ அரை டம்பளர் தேனுல ஊற வச்சு அதை குடிக்கோனும் ... ஊறுன தேனக் குடிக்கோனும் ...
நபர் 1: அப்போ சம்சாரி ?
லே. வி: சார் சம்சாரி ... கூச்சப்படாம கேக்குறார் பாருங்க ... கூச்சப்படாம கேக்குறார் பாருங்க ... சம்சாரி வீட்டு புள்ளைங்க ரெண்டு டம்பளர் பால ஒரு டம்பளருக்கு சுண்டக் காச்சி அதுல இந்த கடுக்காவ ஊற வச்சு, ஊறுன பால குடிக்கோனும் ... ஊறுன பாலக் குடிக்கோனும் ...
நபர் 2: ஏழ – பாழைங்க எதுல ஊற வச்சு குடிக்கனும்யா ... சோடாவுலயா ...
லே. வி: சோடா ஆவியா போயிடும் சார் ஆவியா போயிடும் ... காத்துல கரைஞ்சிடும், மூலிகை சத்தெல்லாம் காத்துல கரைஞ்சிடும் ... ஏழ – பாழைக்கு வெந்நீர் போதும் சார் வெந்நீர் போதும் ... ஒரு டம்ப்ளர் வெந்நீர்ல ஊற வச்சு அந்த வெந்நீரக் குடிச்சா போதும் சார் ...
நபர் 3: எவ்வளோ நேரம் ஊற வக்குறது?
லே. வி: ஒரு மணி நேரம் ஊற வக்கோனும் சார் ஒரு மணி நேரம் ஊற வைக்கோனும் ... தேனோ பாலோ வெந்நீரோ ... ஒரு மணி நேரம் ஊற வைக்கோனும் ...
தூங்கப் போறது முன்னாடி ஒரு மணிநேரம் ஊற வச்சு குடிக்கோனும் ...
ஒரு மண்டலம் சார் ... 48 நாள் ... ஒரு நாள் விடாம இப்படி ஊற வச்சு அந்த திரவத்தை - சுகவாசிக்கு தேனு, சம்சாரிக்கு பாலு, ஏழை - பாழைங்களுக்கு வெந்நீ - ஊற வச்சு குடிக்கோனும் ...
நபர் 4: கடுக்கா அத்தணை நாள் தாங்குமாய்யா ?
லே. வி: மூலிகை கடுக்கா சார் மூலிகை கடுக்கா ... எம்முப்பாட்டன் சித்தருங்க ஏடெல்லாம் கரைச்சுக் குடிச்சு தயாரிச்சது சார் ... கரைச்சுக் குடிச்சு தயாரிச்சது ...
(குனிந்து இன்னொரு குடுவையை எடுத்து)
இங்க பாருங்க இந்த திரவம் ... மூலிகைச் சாறு சார் மூலிகைச் சாறு...
தேனுலயோ பாலுலையோ வெந்நீரிலயோ ஊற வச்ச கடுக்காவ கைபடாம கரண்டியில எடுத்து இதுல ஊற வச்சிடனும் ...
சுத்த பத்தம் முக்கியம் சார் ... சுத்த பத்தியம் முக்கியம் ...
தீட்டுப்பட்ட மகராசிங்க தொடவேகூடாது சார் ... காத்தே படக்கூடாது ...
48 நாள் ... ஒரு மண்டலம் இப்படி விடாம குடிச்சு வந்தா ...
நபர் 5: என்னாய்யாஆகும்?
லே. வி: புள்ளைங்க நாக்குல சரசுவதி டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவா சார் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிடுவா ... கணக்குல பிணக்கு வராது ... சயின்ஸுல டெளட் வராது, கம்ப்யூட்டரை பசங்க பிரிச்சு மேஞ்சிடுவாங்க ... குப்பையில கிடக்கும் மாணிக்கமெல்லாம் துலங்க ஆரம்பிக்கும் சார் ... குப்பமெல்லாம் கம்ப்யூட்டர் கோபுரங்களா ஆயிடும் ... புள்ளைங்க வெள்ளைக்கார துரை கணக்கா சும்மா இங்கிலீஷுல பிச்சு உதற ஆரம்பிக்கும் ... சொன்னா நம்ப மாட்டீங்க சார் நம்ப மாட்டீங்க ... ஒரு வெள்ளைக்கார துரை என் லேக்கியத்த நாஞ்சொன்ன மாதிரி ஒரு மண்டலம் சாப்பிட்டு தமிழில அச்சு பிசறாம பேச ஆரம்பிச்சிட்டார் சார் ... அசல் திருநெல்வேலி தமிழ் ... நம்புவீங்களா சார் ... எல்லாம் என் லேக்கிய மகிமை சார் ... இதெல்லாம் கவர்மெண்டால செய்ய முடியுமா சார் ... நீங்க கவர்மெண்டு கிட்ட கேக்கதான் முடியுமா? கவர்மெண்டுக்கு நேரம்தான் இருக்கா ... சொல்லு சார் ... இன்னா சார் பாக்குற ...
யோசிக்காத சார் யோசிக்காத ... ரொம்ப யோசிக்காத ... அம்பது ரூபா ... அம்பதே ரூபா சார் ... வாங்கிப் பாரு சார் ... புள்ளைகளுக்கு குடு சார் ... புள்ளைங்க வாழ்க்கை பிரகாசமா இருக்கும் சார் ...
(பேசிக் கொண்டே புட்டிக்குள்ளிருந்து கடுக்காய்களை விநியோகிக்கிறான். பார்வையாளர்களுக்கும்.)
நபர் 1: ஏய்யா ஒரு கடுக்கா 50 ரூபா ரொம்ப அதிகம்யா?
லே. வி: இன்னா சார் நீ ... மூணு மணி நேரம் தியேட்டருல முக்கி முக்கி உக்காந்து தசாவதாரம் படத்த பாத்துட்டு அம்மா அந்த குரங்கு வேஷத்துல நடிச்சதும் கமல்தானாம்மா -ன்னு கேட்ட குழந்த மாதிரி கேக்குற! மூலிகை கடுக்கா சார் இது ... 12 வருஷத்துக்கு ஒருமுறைதான் செய்யுறது ... போனா வராது, வித்து தீந்தா கிடைக்காது சார் ... அம்பது ரூபா சார் ... அம்பதே ரூபா ... யோசிக்காத சார் ... புள்ளைங்க படிப்பு சார் ... கம்ப்யூட்டர் இஞ்ஜினியர் சார் ... குப்பம் சார் ... கோபுரமாகோனும் சார் ... கவர்மெண்டால முடியாது சார் ... என் கடுக்கா லேக்கியம் செய்யும் சார் ...
நபர் 2: ஏய்யா அந்த மூலிகைச் சாறுக்கு காசு கேப்பியா?
லே.வி: ஃப்ரீ சார் ... கடுக்காவுக்கு மட்டும்தான் சார் காசு ... விலை மதிப்பில்லாத மூலிகை மருத்துவம் சார் ... பரம்பரை சேவை சார் ... கவர்மெண்டு செய்ய முடியாத சேவை சார் ... அம்பதே ரூபா அம்பதே ரூபா சார் ... வாங்கிப் பாரு சார் ... வாங்கு சார் ...
சும்மா ஒரு தடவை வாங்கிப் பாரு சார் ... இந்தா சார் ...
குறிப்பு: அனைத்து மக்களுக்குமான சமச்சீரான கல்வி முறையை வலியுறுத்தி, State Platform for Common School System என்ற குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் 07.01.09 அன்று மாலை 5.00 மணியளவில், சென்னை அரசுப் பொது மருத்துவனையின் எதிரில் அமைந்துள்ள மெமோரியல் ஹால் அருகே வீதி நாடகமாக நிகழ்த்தப்பெற்றது.
இயக்கம்: கருணா பிரசாத்.
நடிகர்கள்: தரணி, ரியாஸ், விஜய்.
இயக்குனரின் விருப்பத்திற்கிணங்கி லேக்கியம் விற்கும் பாத்திரத்தை மூன்று நபர்களாகப் பிரித்து அவர்களுக்குரிய பகுதிகளையும் பிரித்தோடல்லாமல், குறிப்பான சில பாடப்பிரிவுகள், அரசியல் நிகழ்வுகள் குறித்தும் சில பகுதிகளை எழுதித் தந்தாலும், அவை நேரடியான பிரச்சாரமாக இருக்கும் என்பதாலும், நாடகப் பிரதி, நிகழ்த்துதலின் பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு திறப்புள்ளதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் முதலில் எழுதிய இவ்வடிவத்தையே தக்க வைத்துக்கொள்ள விருப்பம்.
