கொழும்பு நகரில் நட்சத்திர விடுதிகளில் ஆட்டு மந்தைகள் போல அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய ஊடகவியலாளர்கள் அனைவரும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கிருக்கையில் சென்னை நண்பர்களைத் தொடர்புகொண்டிருந்த ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், நேற்று கொழும்பு நகரில் பரவியிருந்த வதந்திகள் உண்மைதானா என்று விசாரித்துச் சொல்லக் கேட்க, (!) பல தரப்பினரையும் விசாரித்ததில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அச்செய்திகள் மிக உறுதியானவை போல பரவியிருந்தன. அதன் அடிப்படையில் எழுதியதே நேற்றைய பதிவு.
எதையும் உறுதி செய்ய இயலா நிலையில், அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் செய்யப்படவேண்டிய அரசியல் பணிகளை முன்னிறுத்தியே பதிவு செய்திருந்ததை வாசித்தவர்கள் உணரலாம்.
இரு முக்கிய நபர்களின் கொலைகள், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு இரண்டு செய்திகளும் வதந்திகள் என்பது இன்று உறுதியாகி உள்ளன.
கல்முனை அணைக்கட்டு தகர்க்கப்பட்டதில் சிங்கள இராணுவத்திற்கு பெரும் இழப்பு என்பதும் உறுதியான தகவலாகிவிட்டது.
கொழும்பு நகரில் தகவல் தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.
இறுதியாக, தற்சமயம், சிங்கள அரசின் தரப்பிலிருந்தும், பிற ஊடகங்கள் வழியாகவும் வரும் செய்திகள் எவையும் நம்பத்தகுந்தவையல்ல என்பதும் உறுதியாகியுள்ளது.
சிங்கள அரசு அரசியல் மற்றும் யுத்த செய்திகள் குறித்த உண்மையான தகவல்கள் சர்வதேச சமூகத்திற்கு கடுகளவும் கசிந்து விடக்கூடாது என்பதில் எடுத்திருக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசியல் தந்திரோபாயங்களும் காசா மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் தந்திரோபாயங்களை அச்சு வார்த்தது போல ஒத்திருப்பதை இச்சந்தர்ப்பத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
பல வகைகளில் ஈழ மக்கள் மீதான போர் குறித்த சர்வதேச சமூகத்தின் அணுகுமுறைகள், இந்திய – அமெரிக்க அரசுகளின் அணுகுமுறைகள் பலவும் ஒன்றே போல இருப்பதையும் மேலோட்டமான அவதானிப்பில் உணரமுடிகிறது.
இச்சந்தர்ப்பத்தில் ஈழ நிகழ்வுகள் குறித்த நம்பத்தகுந்த, உறுதியான தகவல்களை வெளிக்கொண்டு வருவது, ஈழத் தமிழர் மீதான சிங்கள அரச இராணுவப் படுகொலைகள், இந்திய அரசின் கள்ளக்கூட்டை வெளி உலகுக்கு தெரியப்படுத்துவது, ஆகிய முக்கிய பணிகள், மைய நீரோட்ட ஊடகங்கள் வழி வருவதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், அறிவிக்கப்படாத இத்தடைகளை மீறி அவற்றை சர்வதேச சமூகத்திற்கும், உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுக்குமே தெரியப்படுத்த வேண்டிய அவசிய அவசர கடமை எழுந்துள்ளது.
காசா - ஈழம் இரு படுகொலைகளின் ஒப்புமைகள் குறித்துமே சில வாரங்களாக அசைபோட்டு அலசிக் கொண்டிருந்த நிலையில், இன்று தற்செயலாக இத்தளத்தைக் காண நேர்ந்தது: http://virtualgaza.media.mit.edu/
காசாப் பகுதியின் உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில், மாணவர்கள், ஆய்வாளர்கள் இன்னும் பலர் தாமாக முன்வந்து இம்முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இது போன்று, ஆங்கிலம் - தமிழ் இரு மொழிகளிலும், ஈழம் குறித்த தற்கால நிகழ்வுகள் சாத்தியமானவை அனைத்தையும், மைய நீரோட்ட ஊடகங்களுக்கு மாற்றான நம்பிக்கைக்குகந்த செய்திகள், தகவல்கள், குறித்த சேகரிப்பு மையம் (மேற்குறித்த தளம் போன்று) ஒன்றை கூட்டு முயற்சியாக உருவாக்கினால் என்ன என்ற கேள்வி எழுந்தது.
அதை அனைவர் முன்னும் உடன் வைக்கிறேன்.
ஊடக யுத்தம் - ஊடகங்கள் மீதான் யுத்தம் என்பவற்றோடு கடும் புரளி யுத்தத்தையும் தொடங்கி வைத்திருக்கும் இந்திய – சிங்கள தகவல் யுத்தத்தை எதிர் கொள்ள இத்தகைய முயற்சி அவசியம்.
அக்கறை உள்ள, வாய்ப்புள்ள எவரும் இது குறித்து மேலும் முனைய வேண்டுகிறேன்.
எனது பங்களிப்பை முன்மொழிந்து.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment