Dec 31, 2008

வம்ச வதம்

குறிப்பு:

2008, டிசம்பர் 7 அன்று சென்னை மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகில் நடைபெற்ற ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழ்க் கவிஞர்களின் கண்டனப் போராட்ட நிகழ்வில் இப்பிரதி முதன்முதலாக நிகழ்த்தப்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கவிதை வாசிக்கும்படி நண்பர் செல்மா ப்ரியதர்ஷன் அழைப்பு விடுத்தபோது, வெறுமனே சுயதிருப்திக்கான சடங்காக வாசிக்க மனமின்றி, வேறு ஏதேனும் உருப்படியாக செய்ய முடியுமா என்று யோசிக்கிறேன் என்று தெரிவித்தேன்.

ஈழத்தில் தமிழ் மக்கள் இலங்கை அரச இராணுவத்தால் அனுதினமும் கொல்லப்படுவது மிகச் சாதாரணமான நிகழ்வாகிவிட்டிருக்கும்போது, இங்கே தமிழகத் தமிழராகிய நாம் எவ்வகையில் வினையாற்றுவது என்ற கேள்வி சில மாதங்களாகவே மனதை அரித்துக் கொண்டிருந்தது.

இலங்கை அரச இராணுவத்தினரின் படுகொலைகள் மீதான கண்டனங்கள் தமிழகத்தில் சற்றுப் பரவலாக தற்போது எழுந்திருக்கிறது என்பது உண்மையெனினும், 80 - களில் இருந்தது போன்று, வெகுமக்களிடத்தில், ஈழப் போரட்டத்திற்கு ஆதரவான ஒரு எழுச்சி மனநிலை தற்சமயம் இல்லாதிருக்கும் நிலையில், அத்தகைய ஒரு மனநிலையை தமிழக வெகுமக்களிடையே மீண்டும் உருவாக்கும் திசையில் ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டிருந்தது.

இத்தகைய மனநிலையின் தவிப்பில் உருவானதே இந்நாடகப் பிரதி.

தமிழக மக்களிடையே ஒரு உணர்வெழுச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், எவரும் எளிதாக நிகழ்த்தும் சாத்தியங்களை மனதில் வைத்து, நாட்டுப்புற கதைசொல்லல் உத்திகளை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்பதைத் தொடக்கத்திலேயே முடிவுசெய்து, எழுத முனைந்ததில் பிரதி இயல்பாக இவ்வடிவம் கொண்டது.

ஈழப் படுகொலைகளுக்கு எதிராக தமிழக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் விருப்பம் உள்ள எவரும் இப்பிரதியை நிகழ்த்தலாம். எனது அனுமதியைப் பெற வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (பதிப்பிக்க விரும்பும் பெரும் நிறுவனங்களுக்கு இந்த அரசியல் உரிமை இல்லை.)

முதல் நிகழ்த்துதலை சாத்தியப்படுத்திய நண்பர்கள் கருணா பிரசாத், ஆறுமுகவேல், புருஷோத்தமன் இளம் நடிகர்கள் வினோத், தரணி, விஜய், மற்றும் எமக்குப் புரவலர்களாக வாய்த்த "தமிழ் மையம்" அமைப்பினருக்கும் அன்பிற்குரிய நண்பர் தமிழச்சி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.




குடுகுடுப்பைக்காரன்: நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

ஆத்தா பகவதி மாகாளியம்மா

ரத்தஞ் சொட்டுற நாக்கு சொல்லுதம்மா

அம்மா

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

அய்யா

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

மாதேவி மாகாளியம்மா

நர்த்தனமாடி கால்கடுக்க

தலகொடுத்தா

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

மண்ணாச

விண்ணாச

பெண்ணாச

பொன்னாச

பேராச

பேயாச விட்டு

ஆத்தா மாகாளியம்மா

கேட்டா தல கொடுத்தா

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

(பார்வையாளர்களை நோக்கி)

அம்மா நீ கொடுக்கியா

அய்யா நீ கொடுக்கியா

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

நல்ல காலம் பொறக்குது

(பார்வையாளர்கள் பின்னே இருந்து வரும் இளைஞன்)

இளைஞன்: ஏ குடுகுடுப்ப ... நாங் கொடுக்கேன்

குடுகுடுப்பைக்காரன்: தம்பீ ... வெளயாட்டில்ல ... தலயக் கொடுக்கோனும் ... தலயக் கொடுக்கோனும் ...

இளைஞன்: விளையாட்டெல்லாமில்ல

குடுகுடுப்பைக்காரன்: நெஞ்சுல உரமிருக்கா? தைரியமிருக்கா?

இளைஞன்: அதெல்லாம் ஒன்னுமில்ல

குடுகுடுப்பைக்காரன்: வாய்ச்சவடாலா ... தம்பீ ... தெய்வ குத்தமாயிடும் ...

இளைஞன்: ஏ குடுகுடுப்ப ... அதெல்லாம் ஒன்னுமில்லய்யா ... நாங் குடுக்கேன் தலய ... ஆத்தா வரங்குடுப்பாளா?

குடுகுடுப்பைக்காரன்: மனசால பூரணமா வேண்டிக் கேட்டா கொடுப்பா ... தலயக் கொடுத்திட்டு ...

இளைஞன்: என்ன கேட்டாலும் குடுப்பாளா?

குடுகுடுப்பைக்காரன்: எதக் கேட்டாலும் கொடுப்பா ...இந்தக் கடலையே குடிக்கலாம் நீ ...

மரத்தப் புடுங்கலாம்

மலயப் பெயர்க்கலாம்

மண்ணப் பொன்னாக்கலாம்

பொன்ன கல்லாக்கலாம்

கல்ல சிலையாக்கலாம்

சிலைய பெண்ணாக்கலாம்

காத்தக் கட்டி கக்கத்துல வச்சுக்கலாம்

ஆத்தா வரங்கொடுத்தா

நீ தலயக் கொடுத்தா

ஆமா ... ஒனக்கென்ன வேணும்

இளைஞன்: அத நா ஆத்தா கிட்ட கேட்டுக்கறேன்

குடுகுடுப்பைக்காரன்: அட சொல்லு தம்பி; உன் தலயவா கேட்டுப்புட்டேன்

இளைஞன்: அது ஆத்தாவுக்கு

குடுப்பைக்காரன்: சரி சரி சொல்லு ... நா ஆத்தாகிட்ட கூட்டிட்டுப் போறேன் ... ஆத்தாவ இங்கயே வரவழைக்கிறேன்.

இளைஞன்: நெசமா?

குடுகுடுப்பைக்காரன்: உன் தல நெசந்தானே?

இளைஞன்: (பலமாகத் தலையை ஆட்டி)

ம்ம்ம் ... ம்ம்ம்

நா நா கவிஞனாகனும் ... வரகவியாகோனும்

குடுகுடுப்பைக்காரன்: என்னாது!

காளி: அடேய்!

பேய்க்கூத்தாடியபடி காளி அரங்கவெளியை வலம் வந்து அரங்கின் மையத்தில் நிலை கொள்கிறாள். குடுகுடுப்பைக்காரன் (தாயே என்றலறி) முழங்காலிட்டு கைகூப்பி வணங்கி உறைந்து விடுகிறான். இளைஞன் பயந்து நடுங்கி அவன் பின்னே ஒடுங்கி நிற்கிறான்.

காளி: யாரடா அது! தலை கொடுக்க வந்தது!

குடுகுடுப்பைக்காரன்: (பின்னாலிருக்கும் இளைஞனை முன்னே இழுத்து நிறுத்தி)

தாயே! மாகாளி! இவன்தாம்மா, இவன்தாம்மா!

இளைஞன்: நா இல்ல, நா இல்ல.

பயந்து நடுநடுங்கி ஒடுங்கி நிற்கிறான். குடுகுடுப்பைக்காரன், அவனைப் பிடித்து மண்டியிட்டு குனியச் செய்கிறான்.

இளைஞன்: (தலை நிமிராமல்) ஆத்தா! என்ன விட்டுடு, என்ன விட்டுடு!

காளி: அடேய், அற்ப மானிடா! தலை கொடுக்கறேன்னு வந்தது நீ தானா?

இளைஞன்: இல்ல ஆத்தா ... தெரியாம ...

காளி: (குடுகுடுப்பைக்காரனை நோக்கி)

ம்ம்ம் ... என்னடா இது வேடிக்கை!

குடுகுடுப்பைக்காரன்: (நடுங்கிக்கொண்டு) தாயே! பைரவி! அகிலாண்டேஸ்வரி ... ஆரோக்கியமாதா ... இல்லே இல்லே ... ‘அபிராமி அபிராமி' ... ஐயோ ... ஆத்தா ... காளியாத்தா ... பத்ரகாளியம்மா ... நான் சோதிச்சுப் பாக்குறதுக்குள்ள நீயே வந்துட்டியே ... நா என்ன பண்ணுவேன் ...

காளி: ம்ம்ம் ... சரி, என்ன வேணுமாம் இவனுக்கு! என்ன வரம் வேணுமாம்? என்ன கேட்கிறான் இந்தப் பதர்!

குடுகுடுப்பைக்காரன்: தாயே! கவிஞனாகனுமாம்!

காளி: என்னது! ஒரு கிறுக்கனுக்கு அந்த வரத்தை எப்பவோ குடுத்திட்டேனே! சாகுந்தலையும் பாடி மகாகவி பட்டமும் வாங்கிட்டானே அவன்! இப்போ இன்னொரு கிறுக்கனா!

(இளைஞனைப் பார்த்து)

அடேய் மானிடா! எங்கே, நிமிர்ந்து பார்!

(இளைஞன் நடுக்கத்துடன் நிமிர்ந்து பார்க்கிறான்.)

இளைஞன்: தாயே!

காளி: எதுக்கடா உனக்கு இந்த விபரீத ஆசை? சினிமாப் பாட்டு எழுதனுமா?

இளைஞன்: (பயத்தில்) ஆமா ஆத்தா ... இல்ல ஆத்தா ...

காளி: என்ன!

இளைஞன்: இல்ல ஆத்தா ... இல்ல ஆத்தா ...

காளி: பின்னே வேற என்ன?

இளைஞன்: சீரியஸ் கவிஞனாகனும் ஆத்தா

சமூகம் கெட்டுப் போய்விட்டதடா

சரி

சோடாப் புட்டிகள் உடைக்கலாம்

வாடா

இதுமாதிரி சின்னத்தனமா கூத்தடிக்காம ...

எழுது உன் கவிதையை நீ எழுது

இப்படி ஆணவமா சவடால் அடிக்காம

தழுவ விரியும்

தொடைகள்

திரண்டு

பிரிந்து பிரிந்து

இடையே ஓர்

தலைகீழ் கருஞ்சுடர்

எரிந்து எரிந்தழைக்கும்

இதுமாதிரி எழுதோனும் ஆத்தா

குடுகுடுப்பைக்காரன்: அடே அடே! கிராதகா! மாபாதகா! ஆத்தா கிட்டயே இப்படி கூச்சநாச்சமில்லாம பேசறியே ...

காளி: (புரியாமல் விழித்து) என்ன? என்ன அது கூச்சநாச்சமில்லாம?

இளைஞன்: (சுதாரித்துக்கொண்டு) இல்ல ... ஒன்னுமில்ல ஆத்தா ... என் கவிதையை நானே எழுதனும் ஆத்தா ... அவ்ளோதான்.

காளி: அட அற்பப் பதரே! இவ்வளவுதானா! எங்கே நாக்கை நீட்டு. ஆணியால எழுதிடறேன்.

இளைஞன்: ஐயோ! வேணா ஆத்தா, வேணா ஆத்தா ...

காளி: (குடுகுடுப்பைக்காரனைப் பார்த்து) என்னடா இவன்! கவிஞனாகனும்னு கேட்கிறான். நாக்கை நீட்டச் சொன்னா அலறுகிறான்!

(இளைஞனை நோக்கி)

அடே மானிடா! என் பொறுமையைச் சோதிக்காதே!

இளைஞன்: இல்ல ஆத்தா! இல்ல ஆத்தா! நாக்குல எழுதிட்டு, என் தலய எடுத்திட்டு நீ போயிட்டன்னா, அப்புறம் எப்படி நான் கவிஞனா ஆகுறது?

காளி: (குடுகுப்பைக்காரனைப் பார்த்து)

பார்த்தாயா மானுட சாமர்த்யத்தை

(பலமாகச் சிரிக்கிறாள்)

(இளைஞனைப் பார்த்து)

அதனால் ...

இளைஞன்: என் தலய மொதல்ல குடுத்துடறேன் ... அதுக்கப்புறம் நீ ஒட்ட வச்சு நாக்குல எழுதிடு ...

குடுகுடுப்பைக்காரன்: (பார்வையாளர்களை நோக்கி)

நிறைய ஜிவாஜி படம் பாத்திருப்பான் போலிருக்கே!

காளி: (கோபத்துடன்) அடே மானிடா! எடுத்ததைக் கொடுத்ததில்லை. கொடுத்ததை எடுத்ததில்லையடா இந்த மாகாளி.

(குடுகுடுப்பைக்காரனைப் பார்த்து கோபமாக)

மூடனே! எதுவுமே சொல்லவில்லையா இந்தப் பதரிடம்!

குடுகுடுப்பைக்காரன்: மாகாளியம்மா! நேரம் போதல்லையம்மா ... நேரம் போதல்லையே ... நீ சீக்கிரமா வந்துட்டியேம்மா ...

காளி: ஆமாமடா ... அங்கே ஆயிரம் தலைகளை விட்டுவிட்டு, இந்த ஒற்றைக் குடுமிக்காக கடல் தாண்டி வந்தேனே, என்னைச் சொல்லனும்.

இளைஞன்: ஆத்தா ... கடல் தாண்டி வந்தியா!

குடுகுடுப்பைக்காரன்: ஆமாண்டா அபிஷ்டு. ஆத்தா கடல் தாண்டித்தான் வந்திருக்கா. உனக்காக ... உனக்கு வரங் கொடுக்கறதுக்காக ... கோட்ட விட்டுடுவ போல இருக்கே ...

இளைஞன்: ஆனா, ஆத்தா என் தலய எடுத்துடுவாளே! எடுத்துட்டு ஏமாத்திட்டான்னா?

குடுகுடுப்பைக்காரன்: அட, உன் ஒரு தல எம்மாத்திரம் ... ஆத்தா & co பல லட்சம் தலைகள உருட்டியிருக்காக

இளைஞன்: ஆத்தா & co – வா?

குடுகுடுப்பைக்காரன்: ஆமாமடா ... சகோதரிகள் நாலுபேர் ... திசைக்கு ஒருத்தி. மேற்கு ஆரோக்கியமாதாவுக்கு , கிழக்கு மகிஷாசுரமர்த்தினிக்கு , வடக்கு திரிசூலிக்கு , தெற்கே ... பத்ரகாளி ... யுகயுகமா மனுஷங்க ரத்தம் குடிச்சுக் குடுச்சு அட்டகாச நடனம் ஆடிட்டிருக்காங்க. ஆனந்தக் களி நடனம் ... ஆகா ... காணக் கண் கோடி வேணுமடா ... கண் கோடி வேணும் ... என் மாகாளி, பத்ரகாளியம்மா பாதம்பட்ட மண் ரத்தத்தால சிவக்குமடா, ரத்தத்தால சிவக்கும் ... புத்தனையே புல்லனாக்கும்.

இளைஞன்: என்னது! புத்தனையேவா?

குடுகுடுப்பைக்காரன்: நாஞ்சொல்லலையப்பா, நாஞ்சொல்லல. தெற்கின்

மாகாவியம், மகாவம்ச மகாகாவியம் சொல்லுது ...

போர்த்தியிருக்கும் குடுகுடுப்பைக்காரனுக்குரிய சால்வையைக் களைந்துவிட்டு ஒரு கதைசொல்லியாக முன்நகர்ந்து, பார்வையாளர்களை நோக்கி ...

கல்பகோடி ஆண்டுகள் முன்னே

பூமாதேவி மத்தியிலே - நெத்தியிலே

ஒசந்து நின்ன மேருமல அடிவாரத்திலே

பரந்து விரிந்த ஜம்புத்வீபம்

நாவலந்தீவு

பாரதவர்ஷம்

யுகங்கள் கற்பூரமாய் எரிந்து

அந்தார கல்பத்திலே ஆங்கார ஆசையிலே

மண்ணாசை

பெண்ணாசை

பொன்னாசை

பேராசை

பேயாசை விரட்டி

பாவம் பலகோடி புரிந்த பாதகரைக்

காத்துக் கடைத்தேற்றப் பிறந்தான் சித்தார்த்தன்

போதி மரத்தடியில் சித்தம் தெளிந்து

ஞானம் கண்டு

புத்தனான ஒன்பதாம் வருஷத்திலே

ஜம்புத்வீபத்தின் தென் கோடியிலே

இந்து மகாசமுத்திரத்திலே

தத்தளித்துத் தவித்துக் கிடந்த

இலங்கைத் தீவும் சேர்ந்தான்

மாகாளி பாதம் பட்ட மண்ணல்லவா

புத்தனும் புல்லனானான்

புத்தனும் புல்லனானான்

புயலும் பெருமழையும்

இருளும் சுடுநெருப்பும் பொழிந்து

ஆங்கே கூடிக்களித்திருந்த யட்சர்களை

பூச்சிகாட்டி

பணியவைத்தான் பணியவைத்தான்

பெளத்த மாகாவியம்

மகாவம்ச மகாகாவியம்

சொல்லுதடா

புத்தனும் புல்லனானான்

புத்தனும் புல்லனானான்

...

எம் மாதேவி மாகாளி

பெளத்த மாகாவியத்திலே

கொண்ட ரூபம் விகாரி

தமிழன் தலையறுத்த வாள் கழுவி

அச்செந்நீர் பருகி

சூல் கொண்டு

மாகாளி விகாரி ஈன்ற பிள்ளை

துத்தகமுனு ...

துத்தகமுனு ...

கதைசொல்லி, இளைஞன், காளி மூவரும் இணைந்து ஒரு வட்டமாகச் சுழன்று பாத்திரம் மாறுகின்றனர்: கதைசொல்லி அரசனாக, இளைஞன் துத்தகமுனுவாக, காளி விகாரியாக.

அரசன்: (துத்தகமுனுவை நோக்கி) துத்தகமுனு! தாயின் தாள் பணிந்து தருக்கழித்து தணிந்து என் முன்னே வா!

துத்தகமுனு விகாரியின் தாள் பணிந்து, தந்தையின் முன் வந்தமர்கிறான்.

அரசன்: பிள்ளாய்!

காட்டுக் குறவர்க்கும் கிட்டாத தேனெடுத்து

பன்னிரெண்டாயிரம் பிக்குகள் பருகி

மீதம் தந்ததைச் சுவைத்து

தமிழனொருவன் தலையறுத்த

வாள் கழுவி

அச்செந்நீர் பருகி

அறுத்த தலைமீதேறி

அநுராதபுரத்து பொற்றாமரைக் குளத்

தாமரை மலர் சூடி

தவமிருந்து பெற்றாளடா

உன் அன்னை விகாரை.

இப்பால் சோறு உண்டு

யானுரைக்கும் மொழி கேட்டு சபதம் கொள்!

(பால் சோறுள்ள கிண்ணம் எடுத்து, முன்னே வைப்பது போன்ற பாவனை செய்து)

எம் தேசத்து உயிர்ச்சுடராம் பிக்குகளை ஒருநாளும் புறந்தள்ளாய்!

துத்தகமுனு: (பால் சோறு பருகும் பாவனை செய்து)

இத்திண் தோள் மீது சிரம் நிற்கும் வரை எம் பிக்குகள் வழி நடப்பேன் தந்தையே!

அரசன்: (இரண்டாவது பால் சோறு கிண்ணத்தைத் தந்து)

ஒருபோதும் சோதர யுத்தம் புகமாட்டேன் என சபதஞ்செய்!

துத்தகமுனு: (பருகி) இன்னுயிர் துறக்கினும்

உடன் பிறந்தோனை ஒரு வன்சொல் துணியேன்!

அரசன்: தமிழர் தம் பகை நாடேன் என சூல்கொள்!

துத்தகமுனு: !

அலறி ஆவேச நடனம் ஆடி பால் சோறு கிண்ணத்தை வீசி எறிந்து ...

ஏலாது! ஏலாது! ஒருபோதும் ஏலாது!

உரக்கச் சொல்லி விரித்திருக்கும் சால்வையில் கைகால்கள் குறுக்கி படுக்கிறான்.

விகாரி: (அவனருகே சென்று தலை வருடி)

துத்தகமுனு ... ஏனய்யா கூனிக்குறுகி இக்கோலம் ... ?

துத்தகமுனு: தாயே!முப்புறம் கடல் ... வடக்கே தமிழர் ... எங்ஙனம் யான் கைவீசி, கால் பரப்பி உடல் சாய்ப்பேன்?

விகாரி: (ஆங்காரமாக சைகையுடன்) இப்படி உதையடா! தமிழரை இப்படி உதை!

உதைத்துக் காட்டி ஆவேச நடனமாடி வலம் வந்து நிற்க, அதேபோது, துத்தகமுனுவும் அரசனும் இரு சேவகர் போல், சற்று தள்ளி மண்டியிட்டு நிலை கொள்கின்றனர்.

விகாரி: உதைத்துத் துரத்து

தமிழரை உதைத்துத் துரத்து ...

கொல்

கொல்

பட்டத்து யானை சரிந்துபட

கரம் பரப்பி களத்தில்

நெடுக வீழ்வான் எல்லாளன்

அவன் மகுடம் மண்ணில் தேய்த்து அமிழ்த்தி

சிரம் கொய்து

ஆங்கே நெடிதுயர்ந்து எழுப்பு ஓர் தூபி

ஆண்டுகள் ஈராயிரம் கடக்கினும்

உன் வழித்தோன்றல்கள்

இரத்தத்தினால் அபிஷேகம் செய்து

எனை வழிபட ஏதுவாய்

நெடிதுயர்ந்த ஓர் தூபி ...

தமிழர் தலையறுத்து

இரத்தாபிஷேகம்

இரத்தாபிஷேகம்

புத்தம் சரணம் புத்தம் சரணம் ...

தலைகள்

தலைகள்

புத்தம் சரணம் புத்தம் சரணம் ...

இரத்தம்

இரத்தம்

புத்தம் சரணம் புத்தம் சரணம் ...

எங்கே

எங்கே

புத்தம் சரணம் புத்தம் சரணம் ...

யாரடா அங்கே

அடே வர்த்தனா

அடே பக்சனா

எங்கேயடா இரத்தம்

எங்கேயடா இரத்தம்

இருவரும் ஒருசேர: தாயே! இதோ ... இதோ ...

இருவரும் பார்வையாளர்களிடையே அமர்ந்திருக்கும் 10 நடிகர்களில் ஒருவரைப் பிடித்து இழுத்து விகாரியின் முன் நிறுத்தி ...

இருவரில் ஒருவர்: உன் பேரென்ன?

பிடித்து வரப்பட்டவர்: குமரன்

வயது: 15

விகாரி: கொல்! கொல்!

இருவரும் அந்த இளைஞனைக் கொல்வது போன்று பாவனை செய்ய, அவன் விகாரியின் முன் வீழ்கிறான்.

அடுத்தவர் ...

இருவரில் ஒருவர்: பேரென்ன?

பி.: கந்தய்யா

வயது: 18

விகாரி: அறு! கழுத்தை அறு!

பாவனை ... இளைஞன் முன் விழுந்தவன் அருகே வீழ்கிறான்.

அடுத்தவர் ...

இரு. ஒரு: பேரச் சொல்லு?

பி. : கோணேஸ்வரி

விகாரி: இவளைச் சூறையாடுங்கள்!

இருவரும் அவளைச் சுழற்றி விட அவள் மும்முறை சுழன்று விழ ...

விகாரி: அவள் யோனியில் குண்டைத் திணி! வெடித்துச் சிதறட்டும்!

அடுத்தவர் ...

இரு. ஒரு: பெயர்?

பி. : யோகன் ... 14 வயசுங்கோ...

விகாரி: கிட்டே இழுத்துவாங்கடா அவனை ...

மடியில் கிடத்தி கழுத்தைக் கடித்து இரத்தம் உறிஞ்சுவது போன்று பாவனை செய்து உருட்டி விடுகிறாள்.

சரசரவென அடுத்தடுத்து ... : குமுதா 16, செல்வா 22, குமரேசன் 19, ராசய்யா 17, யோகேஸ்வரன் 20, சீராளன் 15...

உடல்கள் ஒன்றன்மீது ஒன்றாகக் குவிந்து ஒரு மலை போல விழுந்துகிடக்க விகாரி அப்பிணக்குவியலைச் சுற்றி ஆவேச நடனமாடி, இறுதியில் சேவகம் புரிந்த வர்த்தனா, பக்சனா இருவரையுமே மடியில் கிடத்தி இரத்தம் குடித்து அப்பிணக்குவியலில் தள்ளி, குவியலின் மேல் ஒருகாலை வைத்து ஆவேசம் அடங்காது நிற்கிறாள்.

* * *

Dec 24, 2008

ரங்கநாத்தின் பேட்டி முதன் முறையானதல்ல

குமுதம் ரிப்போர்ட்டர் நேற்று வெளியிட்ட ஜெ. ரங்கநாத்தின் பேட்டியில் அவர் தெரிவித்திருக்கும் விஷயங்கள் பலவும் அவ்விதழ் கூறிக்கொள்வது போல ‘முதல் முறையானது' அல்ல (சோனியா காந்தியும் அவரும் பேசியது இதுவரையில் எந்த இதழி்லும் வரவில்லை என்பதையே இப்படி தந்திரோபாயமாக எழுதியிருக்கிறார்கள்) .

1999 - ஆம் வருடமே ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி சிறையிலிருந்து வெளியானவரிடம் ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு “படுகொலை குறித்த அனைத்து விவரங்களையும், சிவராசனுக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பதையும் பத்திரிகைகளுக்குச் சொல்லிவிடப் போவதாக
மிரட்டினார்” (அழுத்தம் எனது) என்று ஃப்ரண்ட் லைன் பத்திரிகையாளர் டி. எஸ். சுப்பிரமணியன் எழுதுகிறார்.

("Are you happy?" a reporter asked Subha Sundaram, one of those acquitted, as he stepped out of the Chennai Central Prison on May 12 evening. "After years of suffering and jail life, will I not be happy?" he answered. J. Ranganath, also released from the same prison, said, "I am bitter even though I know I am through." Ranganath threatened to reveal everything to the press including the "motive" behind the assassination and who financed Sivarajan, leader of the LTTE's assassination cell. He said the motive was to create a "political vacuum" in the country. http://www.hinduonnet.com/fline/fl1611/16111060.htm)

அடுத்து இவரது விரிவான பேட்டி The Week - June 6, 1999 இதழில் வந்துள்ளது.
அந்த பேட்டியை முன்வைத்து சச்சி சிறீ காந்தா தனது நூலின் அத்தியாயம் ஒன்றில் எழுதியிருப்பவை இங்குள்ளது: http://www.tamilnation.org/forum/sachisrikantha/vp/vp32.htm (அச்சு இதழைத் தேடியெடுத்து ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும்.)

ராஜீவ் காந்தி கொலை குறித்த அரசின் பிரச்சாரங்கள், புலனாய்வு பூதாகரங்கள் மீது என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை எனக்கு. அதனால் அவற்றை முற்றிலுமாக அசட்டை செய்வது வழக்கம்.

குமுதம் ரிப்போர்ட்டர் “முதன் முதலாக” ரங்கனாத்தின் ரகசிய சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ளதாக தம்பட்டமடித்துக் கொண்டாலும் (ஒருவேளை இது மொத்தமே முன் குறிப்பிட்டுள்ள பேட்டியை தன் வசதிக்கேற்ப - வியாபாரத்திற்காக ரீசைக்கிள் செய்துகொள்ளும் உத்தியோ என்ன கண்றாவியோ!) மீண்டும் ஒருமுறை ராஜீவ் கொலையை பொதுக்களத்திற்கு கொண்டு வந்திருப்பதை (அதுவும் வியாபார உத்தியாக இருக்கலாம். வேறு இதழ்களோ மற்ற ஊடகங்களோ இதை சட்டை செய்யவில்லை என்பதும் இப்படி யோசிக்க வைக்கிறது) சிவில் சமூகத்தில் ஊறியிருக்கும் பொது அபிப்பிராயத்தை மாற்றும் நோக்கில் முன்னெடுக்கலாமா என்பது யோசனை.

கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு, ('முதன்முறையாக' வந்துள்ள புதிய செய்தி என்று நம்பி) அவசரப்பட்டு என் தனிப்பட்ட வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு நேற்று இதற்காக ஏகப்பட்ட நேர விரயம்.

என்றாலும், இன்றும் தொடர்ந்து இச்செய்தியைத் துரத்தியதில் இதுவரை கவனிக்கத் தவறிய பல விசயங்கள் கவனத்துக்கு வந்தன என்பதில் மகிழ்ச்சியே.

இன்னும் சில நூல்களுக்காக காத்திருக்கிறேன்.

சில சிறு நூல்களை மொழியாக்கம் செய்யும் திட்டம் ஒன்றையும் நண்பர் ஒருவர் முன்மொழிந்துள்ளார்.

Dec 23, 2008

ராஜீவ் காந்தி படுகொலை: அவிழ வேண்டிய மர்மங்கள் - 7

நன்றி: குமுதம்.com

ராஜீவ் காந்தி படுகொலை: அவிழ வேண்டிய மர்மங்கள் - 6

ராஜீவ் காந்தி படுகொலை: அவிழ வேண்டிய மர்மங்கள் - 5

ராஜீவ் காந்தி படுகொலை: அவிழ வேண்டிய மர்மங்கள் - 4

ராஜீவ் காந்தி படுகொலை: அவிழ வேண்டிய மர்மங்கள் - 3

ராஜீவ் காந்தி படுகொலை: அவிழ வேண்டிய மர்மங்கள் - 2

ராஜீவ் காந்தி படுகொலை: அவிழ வேண்டிய மர்மங்கள் - 1

குமுதம்.காம் வெளியிட்டுள்ள திருச்சி. வேலுச்சாமியின் காணொளி நேர்காணல்.



Dec 22, 2008

ராஜீவ் காந்தி கொலை - அவிழத் தொடங்கியுள்ள மர்மங்கள்

குறிப்பு: இச்செய்திக்கட்டுரை இவ்வேளை உலகெங்கும் வாழும் தமிழரிடையே சென்று சேர்ந்து விட்டிருக்கக்கூடும். எனினும் இயன்ற அளவிற்கு கவனப்படுத்தும் பொருட்டு என் பங்கிற்கு பதிவிலேற்றுகிறேன். ராஜீவ் காந்தியின் படுகொலையை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் இதுகாறும் அரங்கேற்றுப்பட்டு வந்த மிக மோசமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கப் புள்ளியாக இது அமையுமா என்று பொறுத்திருந்தே காணவேண்டும்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில்,
ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்.

91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் சோனியாகாந்தியின் கருணையால் நளினியின்
தூக்கு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

`ராஜீவ்காந்தி படுகொலைக்கு உண்மையான காரணம் என்ன?' என்று அறிவதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒற்றைக்கண் சிவராசன், சுபா உள்பட சில குற்றவாளிகள் கடைசியாக ரங்கநாத்தின் வீட்டில் பதுங்கி இருந்ததால், அவருக்கு இந்தப் படுகொலையின் நிஜப்
பின்னணி தெரிய வாய்ப்புள்ளது என்று சோனியாகாந்தி உறுதியாக நம்பியிருக்கிறார். ஏனென்றால், படுகொலைச் சம்பவம் நடந்தபிறகு, பெங்களூருவில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த 21 நாட்களும் அவர்களைச் சுற்றி நடந்த பல்வேறு விஷயங்கள் சோனியாவின் கவனத்திற்குப் போயிருக்கின்றன. இதையடுத்து, ரங்கநாத்தைச் சந்திக்க சோனியா விருப்பப்பட்டிருக்கிறார்.

அதன்பேரில், தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான தமிழ் உணர்வாளர் (முன்பு
காங்கிரஸில் பொறுப்பு வகித்தவர்) ஒருவர் மூலம், தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி. ஒருவர் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. டெல்லியில் நடந்த இந்த `ரகசிய சந்திப்பில்' படுகொலையின் முக்கியமான விஷயங்களை சோனியாவிடம், ரங்கநாத் கூறியதாகவும் சொல்கின்றனர். தற்போது சிறையில் உள்ள `ராஜீவ் கொலையாளிகள் வெறும் கருவிகள்தான்' என்ற மனநிலைக்கு சோனியா மாறியதற்கும் ரங்கநாத்தின் சந்திப்பைத்தான் முக்கியமானதாகக் கூறுகிறார்கள் தமிழ்
உணர்வாளர்கள். இந்தச் சந்திப்பு குறித்து இதுவரை சோனியாவோ, ரங்கநாத்தோ மீடியாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. சோனியாவும், `எனது கணவர் கொலையில் தொடர்புடையதாகச் சொல்லப்படுபவர்களை தூக்கில் போட எமக்கோ, எமது குழந்தைகளுக்கோ சிறிதும் விருப்பமில்லை' என தனது நிலையைத் தெளிவாக எடுத்துக்
கூறியுள்ளார்.

ஆனாலும், இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்கள், `ராஜீவ் கொலையாளிகளை
ராஜீவ்காந்தியின் ஆவியே மன்னித்தாலும், நாங்கள் மன்னிக்க மாட்டோம்' எனக் குரல் கொடுக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், `சோனியாவிடம் பெங்களூரு ரங்கநாத் பேசியது என்ன? சோனியா கேட்ட கேள்விகள் என்ன? அவரது பதில்களுக்கு ராஜீவ்காந்தியின் மனைவியாக சோனியாவின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது?' என்றெல்லாம் இயல்பாக எழும்
கேள்விகளுக்கு விடைதேடி ரங்கநாத்தைச் சந்திக்க முயன்றோம். பலநாட்கள் முயன்றும் ரங்கநாத் எங்கே இருக்கிறார்? என அறிய முடியவில்லை. ஒருகட்டத்தில் நாம் ரங்கநாத்தை தொலைபேசியில் பிடிக்க, நம்மிடம் பேசிய அவர், "நீங்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கேள்விப்பட்டேன். எல்லா விஷயங்களையும் மறந்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் நிம்மதியாக இருக்கிறேன். இருந்தாலும் சோனியாவின் சந்திப்பில் பேசப்பட்ட பல உண்மைகளை இதுவரை எந்த மீடியாவுக்கும் நான் தெரிவிக்கவில்லை. உங்களது தேடுதல் முயற்சிக்காக நான் பேச விரும்புகிறேன். வாருங்கள்'' என கிரீன் சிக்னல் கொடுக்க, அவரை நாம் நேரில் சந்தித்துப் பேசினோம். இனி ரங்கநாத் பேசுகிறார்...

"அப்போது நான் பெங்களூருவில் பசவண்ணன் குடியில் வசித்து வந்தேன். கார்த்திக் எண்டர்பிரைசஸ் என்ற கம்பெனியை நடத்தி வந்தேன். எனக்கு சிவாஜி நகரைச் சேர்ந்த ராஜன் என்பவர் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார். புலிகள் இயக்கம் அப்போது தடை செய்யப்படவில்லை. ராஜீவ்காந்தி படுகொலை நடந்தபிறகு, ஜூலை மாதம் 30-ம் தேதி ராஜன் என்னிடம், `ஒரு அவசர உதவி வேண்டும். எனது நண்பர்களுக்கு வாடகைக்கு வீடு
வேண்டும்' என்றார். நானும் தொழில் சரியில்லாமல் சிரமத்தில் இருந்ததால்
சம்மதித்தேன். பிறகு, ஆகஸ்ட் முதல் தேதி ராஜனிடம் இருந்து போன் வந்தது. நான் அவரைச் சந்தித்தபோது, சஞ்சய்வாணி பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டு, `சி.பி.ஐ. போலீஸார் ராஜீவ் கொலையாளிகளைத் தேடி பெங்களூரு வந்தபோது, குலத்தான்,
அரசன் என்ற இரண்டு புலிகள் குப்பி(சயனைடு) சாப்பிட்டு இறந்துவிட்டதாகச் செய்தி வெளியாகியிருந்ததை' என்னிடம் காட்டினார். பிறகு `எனக்குப் பிரச்னையாக இருக்கிறது. உடனே வீடு வேண்டும்' எனக் கேட்டார். நானும் ஏற்பாடு செய்கிறேன் என்றபடியே வீட்டுக்குப் போய்விட்டேன்.

பிறகு ஆகஸ்ட் 20-ம் தேதி சிவாஜி நகரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்திற்கு வருமாறு ராஜன் அழைத்தார். அங்கேயும் `நண்பர்களுக்கு வீடு வேண்டும். ஏற்பாடு செய்து விட்டாயா?' என்று கேட்டார். நான் பதில் சொல்வதற்குள் பச்சை நிற ஜிப்சி வண்டி ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய சுரேஷ் மாஸ்டர், டிரைவர் கீர்த்தி(இவர் பெயர் கீர்த்தி என பின்னர்தான் தெரியவந்ததாம்), இன்னொரு டிரைவர் ஆகியோர் ராஜனிடம் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அந்த வழியாக போலீஸ் வாகனம் ஒன்று போக, உடனே என்னிடம் திரும்பிய சுரேஷ் மாஸ்டர் துப்பாக்கியைக் காட்டி, `நாங்கள் வருவதை போலீஸில் சொன்னாயா?' என மிரட்டியவாறு, ராஜனைப் போகச் சொன்னார். என் கண்ணில் துணியைக் கட்டினார். வண்டி கிளம்பும்போது சுரேஷ் என்னிடம், `தமிழ்நாட்டில் பிரச்னை தீவிரமாகிவிட்டது. நாங்கள் இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் போராடி வருகிறோம். கோடியக்கரை
சண்முகத்தை விசாரணை என்ற பெயரில் சி.பி.ஐ. போலீஸார் தூக்கில் போட்டுக் கொன்றுவிட்டார்கள். அவர் தற்கொலை செய்ததாகக் கதைகட்டி விட்டார்கள். நாங்கள் அங்கு இருந்தாலும் இதுதான் நடக்கும் என்பதால் இங்கு வந்திருக்கிறோம். தாற்காலிகமாகத்தான் உங்கள் வீடு தேவை' என்றார்.

பிறகு எனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தினர். கண்கட்டை அவிழ்த்துவிட்டுப் பார்த்தபோது, `இவர்களுக்கு எப்படி என் வீடு தெரியும்?' என ஆச்சரியப்பட்டேன். அவர்களும் கிளம்பிவிட்டார்கள். நான் இந்தச் சம்பவம் பற்றி என் மனைவி மிருதுளாவிடம் விவரித்துக் கொண்டிருந்தபோது, வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது அதிர்ந்தே போனேன். அங்கு சுரேஷ் மாஸ்டர், டிரைவர்
கீர்த்தி, ஒற்றைக்கண் சிவராசன், சுபா என மொத்தம் ஆறு பேர் நின்று
கொண்டிருந்தார்கள். சுபா கையில் பிஸ்டல் இருந்தது. என் மனைவி அதிர்ச்சியோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சுபா என் மனைவியிடம், `போகும் வழியில் போலீஸ் ஜீப் சென்றதால் இங்கு வந்தோம். இலங்கையில் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் தமிழர்களை குறிவைத்துச் சாகடிக்கிறது. தமிழச்சிகளைக் கற்பழிக்கின்றனர்...' என ஏதேதோ பேசினார். அன்றிலிருந்து 21 நாட்கள் அவர்கள் என் வீட்டில்தான் தங்கினர். சுபாவுக்கு சமையல் நன்றாகத் தெரியும். இலங்கைப் புட்டு, கொழும்பு சமையல் என விதம்விதமாகச்
செய்வார். அப்போதெல்லாம் சுபாவும், சிவராசனும், `செத்தாலும் இலங்கையில்தான் சாகணும்' என்பார்கள். நானோ, `நீங்கள் இருப்பது தெரிந்தால் எங்களுக்கும் பிரச்னை வரும். சீக்கிரம் போய்விடுங்கள்' என்போம்.

அப்போது இலங்கை சிங்களச் சண்டையில் அடிபட்ட 13 பேர் முத்தத்தி கோயில் காட்டுப் பகுதியில் ரகசியமாகச் சிகிச்சை பெற்று வந்தனர். வீரப்பனைத் தேடி காட்டுக்குள் அலைந்த அதிரடிப்படையின் கண்களில் இவர்கள் சிக்கிவிட்டார்கள். `போலீஸ் பிடித்துவிட்டது' என பயந்துபோன அவர்களில் ஒன்பது பேர் குப்பியைக் கடித்து சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். மற்றவர்கள் பிடிபட்டபோது, `சிவராசன், சுபா
ஆகியோர் ரங்கநாத் வீட்டில்தான் பதுங்கியிருக்கிறார்கள்' என்ற தகவலையும்
சொல்லிவிட்டார்கள். போலீஸ் தேடி வரும் தகவல் தெரிந்ததும், உடனே வீட்டில் இருந்த பொருட்களை கோணன்னகுண்ட என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு மாற்றினோம். இதுதான் நான் செய்த மிகப் பெரிய தவறு.

என் மனைவியும் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டார். அப்போது சிவராசன் தலைக்கு பத்து லட்சமும், சுபா தலைக்கு ஐந்து லட்சமும் விலை நிர்ணயித்து இருந்தார்கள். ஆகஸ்ட் 17-ம் தேதி எனது வீட்டை சி.பி.ஐ. போலீஸ், என்.எஸ்.ஜி. கமாண்டோ (தேசிய பாதுகாப்புப் படை), எஸ்.டி.எஃப். (அதிரடிப்படை) படை வளைத்திருந்தது. கமிஷனர்
ராமலிங்கம், துணைகமிஷனர் கெம்பையா ஆகியோர் என் வீட்டின் எதிரில்
முகாமிட்டிருந்தனர். நானும் இயல்பாக அங்கு செல்ல, `இவர்தான் ரங்கநாத்' என கூட்டத்தில் யாரோ சத்தம் போட்டுச் சொல்ல, அதிர்ந்துபோய் ஓட ஆரம்பித்தேன். அதற்குள் போலீஸார் என்னை வளைத்துப் பிடித்து, ஜெய்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச் சென்றார்கள். ராஜீவ் படுகொலையை விசாரிக்கும் எஸ்.ஐ.டி. (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்) அதிகாரியும், சி.பி.ஐ. இயக்குனருமான கார்த்திகேயன் அங்கு வந்தார். பல கேள்விகளை என்னிடம் கேட்டார். பிறகு சிவராசனிடம் பேச்சுவார்த்தை நடத்த என்னை அழைத்துச் சென்றனர்.

எனது வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்தில், சரக்கு லாரி ஒன்று அப்பகுதி
கால்வாயில் பெரும் சப்தத்துடன் மோத, போலீஸார் துப்பாக்கியால் எனது வீட்டை நோக்கிச் சுட ஆரம்பித்துவிட்டனர். இந்தத் தாக்குதலில் பாலாஜிசிங், ஜெய்சிங் உள்பட மூன்று போலீஸாருக்கு துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது. வீட்டில் சிவராசன் குப்பியைக் கடித்தபடி நெற்றிப் பொட்டில் அவராகவே சுட்டுக் கொண்டு இறந்து கிடந்ததார். சுபா, கீர்த்தி, நேரு, சுரேஷ் மாஸ்டர், ஜெமீலா(இந்தப் பெண் அங்கே எப்படி வந்தார் என்று தெரியவில்லை) எல்லாரும் சயனைடு சாப்பிட்டு இறந்துபோனார்கள். பிறகு என்னைப் பத்துநாட்கள் சட்டவிரோத காவலில்சி.பி.ஐ. வைத்திருந்தது. எனக்கும், புலிகள் அமைப்புக்கும் உள்ள தொடர்பு பற்றி எந்த ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. என்னைக் குற்றவாளியாகச் சித்திரிக்க என் மனைவியையே எனக்கு எதிராக சாட்சி சொல்ல வைத்தனர்.

வழக்கு விசாரணைக்காக சென்னைக்கு என்னை ஹெலிகாப்டரில் கூட்டி வந்தனர். இந்தச் சம்பவத்தில் 56 பேரை போலீஸார் ரிமாண்ட் செய்தனர். செங்கல்பட்டு சிறையில் நான் இருந்தபோதுதான் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், பேரறிவாளன் உள்பட பலரைச் சந்திக்க முடிந்தது...'' என்றவர், தொடர்ந்து...

"சிவராசன் உள்ளிட்டவர்கள் தங்கியிருக்கும்போது நடந்த `ரகசியங்கள்' இதுவரை பரவலாக வெளியில் தெரியாது. அப்போது எஸ்.டி.டி. போன் பூத்துகள் பெரிய அளவில் இல்லை. சிவராசன், சுரேஷ் மாஸ்டர் ஆகியோர் எம்.ஜி. ரோட்டில் உள்ள காமதேனு ஓட்டலுக்கு போன் பேசுவதற்குச் செல்வார்கள். நான் நான்கு முறை அவர்களோடு போயிருக்கிறேன். ஒருமுறை பேசி முடித்ததும், `சந்திராசாமிக்குத்தான்(நரசிம்மராவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்) போன் செய்தோம். நாங்கள் சந்திராசாமியுடன் தமிழில்தான் பேசுவோம். அதை அங்குள்ள ஒருவர்
அவருக்கு மொழி பெயர்த்துச் சொல்லுவார். இந்தக் கொலைக்கு(ராஜீவ்காந்தி)
முக்கியக் காரணமே சந்திராசாமிதான். நேபாளம் வழியாக நாங்கள் தப்பிச் செல்ல அவர்தான் வழி உருவாக்கித் தரப் போகிறார்' என என்னிடம் சுரேஷ் மாஸ்டர் கூறினார். பின்னர் அவரே தொடர்ந்து, `முன்பு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பயிற்சி எடுத்தேன். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து விலகிவிட்டேன். எல்லாருக்கும் பொது எதிரியான ராஜீவைக் கொல்வதற்கு எங்களுக்கு சந்திராசாமிதான் உதவினார்' என்றார். நான் அதிர்ந்து போனேன்.

அப்போது சிவராசன் என்னிடம், `ஆறு மாதங்களுக்கு முன்பு ஹரித்துவாரில் உள்ள சந்திராசாமியின் ஆசிரமத்தில்ராஜீவ்காந்தியைக் கொன்ற பெல்ட் பாம், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து மிகப் பெரிய யாகமே நடந்தது. யாகம் முடிந்ததும் சந்திராசாமி, `நீங்கள் தமிழ்நாட்டிற்குப் போகும் காரியம் பெரும் வெற்றி பெறும்' என வாழ்த்தினார். எனக்கு அதைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது' என்றார் வேடிக்கையாக. நான் இந்த விஷயங்களையெல்லாம்
சி.பி.ஐ. இயக்குனர் கார்த்திகேயனிடம் கூறியபோது, அவர் அதிர்ச்சியாக என்னிடம், `சந்திராசாமி தொடர்பு பற்றி உனக்கு எப்படித் தகவல் தெரியும்? இனி இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கோடியக்கரை சண்முகத்தின் கதிதான் உனக்கும் ஏற்படும். ஞாபகத்தில் வைத்துக் கொள்' என மிரட்டியவர், கொஞ்சமும் தாமதிக்காமல் பேப்பர் வெயிட் ஒன்றை எடுத்து என் வாயில் பலமாக அடித்தார். அதில் ஒரு பல் உடைந்துவிட்டது. இரண்டு கால்களிலும் பலமாக அடித்தார். பலமான காயம் ஏற்பட்டுவிட்டது (காயத்தைக் காட்டுகிறார்).

இதில் சி.பி.ஐ. போலீஸார் என்னை பலிகடாவாக்குவது தெரிந்தது. இதேபோல் விஜயன், அவரது மனைவி செல்வலட்சுமி, நளினி உள்பட பலர் சிக்கியிருப்பதை அறிந்தேன். இவர்களெல்லாம் எந்த வகையிலும் இந்தச் சம்பவத்தில் தொடர்பில் இல்லாதவர்கள். கொலையில் ஈடுபட்டவர்களை நேரில் பார்த்திருக்கலாம். பேசியிருக்கலாம். ஆனால், கொலை செய்வதற்கான தகவல் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது. அதேபோல், தனது உறவினரின் குழந்தைகள் விளையாடும் பொம்மையில் போடுவதற்காக பேரறிவாளன் இரண்டு சிறிய பேட்டரிகளை வாங்கியிருந்தார். அதற்கான ரசீதை அவர் வைத்திருந்ததாகவும், பெல்ட் பாம் தயாரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வெடிகுண்டைத் தயாரித்தது அமெரிக்காவா, இலங்கையா என இதுவரை தெரியவில்லை. இந்தச் சம்பவத்தின்
தலைமை விசாரணை அதிகாரி ரகோத்தமன், `பெல்ட் பாம் தயாரித்தது யார் என்றே தெரியவில்லை' என்று கூறியிருக்கிறார். இப்படி முரண்பாடான இந்த வழக்கில் பேரறிவாளன் இன்று வரையில் தூக்குத் தண்டனைக் கைதியாகவே சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கில் ஏ-26 ஆக நான் சேர்க்கப்பட்டேன். 98-ம் ஆண்டு மார்ச்சில் எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்தது. நான் உள்பட ஐந்து பேர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டோம். 99-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் விசாரணையில் எனக்கு விடுதலை கிடைத்தது. ஏழு பேர் தண்டனை உறுதி செய்யப்பட்டது!'' என்றவரிடம்,

`சரி.. விஷயத்துக்கு வருவோம். சோனியா காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? என்ன பேசினீர்கள்? உங்களிடம் சோனியா என்ன கேள்விகளைக் கேட்டார்?' என வரிசையாகக் கேள்விகளை அடுக்கினோம்.

"மிகவும் ரகசியமாக நடந்த சந்திப்பு அது. இதுவரையிலும் இதைப் பற்றி நான் யாரிடமும் கூறியதில்லை. முதல்முறையாக உங்களிடம் கூறுகிறேன். 99-ம் ஆண்டு ஜனவரி மாதம், பத்தாண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் என்னை விடுதலை செய்தது. பிறகு ஜூன் மாத வாக்கில், சோனியாகாந்தி என்னைச் சந்திக்க விரும்பும் தகவல் எனக்குக் கிடைத்தது. அதன்பேரில் சென்னையில் வசிக்கும் புலிகளின் ஆதரவுத் தலைவர் ஒருவர் வீட்டில் நான் இருந்தபோது, தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின்
உயர் பொறுப்பில் இருக்கும் `முக்கியமான' நபர் அங்கு வந்தார். அவர் என்னை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். கூடவே மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும் வந்தனர்.

டெல்லி மவுரியா ஓட்டலில் என்னைத் தங்க வைத்தனர். உளவுப் பிரிவு அதிகாரிகள் எனக்குப் புதுத்துணி வாங்கித் தந்தனர். மறுநாள் காலை ஜன்பத் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அம்பாசிடர் காரில் நான் சென்றபோது, பின்னால் பதினைந்து செக்யூரிட்டி வாகனங்கள் எனக்குப் பாதுகாப்பாக வந்தன. காலை 7.45 மணிக்கு சோனியா வீட்டுக்குப் போனபோது கடுமையாகச் சோதனை செய்தனர். சோனியாவின் செயலாளர் வின்சென்ட் என்னிடம், அருகில் இருந்த பிங்கி என்பவரை அறிமுகப்படுத்தி,
`இவர் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் பேத்தி. நன்றாக மொழி பெயர்ப்பார்' என்றார். நான் அவருக்கு வணக்கம் வைத்தேன். பிறகு சோனியாகாந்தி வந்து அமர்ந்தார். அவர் என்னிடம் ஏழு கேள்விகள்தான் கேட்டார்.

முதல் கேள்வியாக, `என் கணவருக்கும், உங்களுக்கும் ஏதாவது பிரச்னை இருந்ததா?' என்றார். நான், `அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸில் இருந்தவன். கூட்டத்தோடு கூட்டமாக டெல்லி வந்து இந்திராகாந்தியைச் சந்தித்திருக்கிறேன். ராஜீவ் மீதும் பெரிய மதிப்பு வைத்திருக்கிறேன்' என்றேன்.

இரண்டாவதாக, `உங்கள் வீட்டில் சிவராசன், சுபா உள்ளிட்ட குற்றவாளிகள்
தங்கியிருந்தபோது, படுகொலை செய்வதற்கான காரணம் பற்றி ஏதாவது பேசினார்களா?' எனக் கேட்க, நானும், `அவர்கள் என்னிடம் பேசியவரை ஐ.பி.கே.எஃப். (அமைதிப்படை) இலங்கையில் செய்த அட்டூழியங்களைப் பற்றிப் பேசினார்கள். அதன் எதிரொலியாகத்தான் சம்பவம் நடந்திருக்கிறது என்றனர். சந்திராசாமிக்கும் இதில் தொடர்பிருக்கிறது என அவர்கள் பேசிக் கொண்டதில் இருந்து தெரிந்து கொண்டேன்' என்றேன்.

மூன்றாவதாக, `இதைப் பற்றி சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சொன்னீர்களா?' என்றார். `அவர்களிடம் இந்த உண்மைகளை விரிவாக எடுத்துரைத்தேன். அதற்காக அடிதான் விழுந்தது. இயக்குனர் கார்த்திகேயன் எனது பல்லை உடைத்தார். சுட்டுக் கொல்வதாகவும் மிரட்டினார்' என்றேன்.

நான்காவதாக, `தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கு இந்தச் சம்பவத்தில்
தொடர்பிருக்கிறதா?' என்றார். `எனக்குத் தெரியாது. நான் கவனித்த வரையில் அப்படிப்பட்ட தொடர்புகள் இருப்பதாகத் தெரியவில்லை' என்றேன்.

ஐந்தாவது கேள்வியாக, `பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்ப்பதைவிட்டுவிட்டு ஏன் படுகொலை செய்தார்கள்?' என்றார். `அதுதான் எனக்கும் தெரியவில்லை' என்று நான் சொன்னபோது, சோனியாவின் முகம் சுருங்கியிருந்தது. பின்னர் நிதானமாக, `என் மீது அவர்களுக்கு ஏதாவது கோபம் இருக்கிறதா?' என்றார். `நான் பேசியது வரை உங்கள் மீது
நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை' என்றேன்.

இறுதியாக, `சிவராசன், சுபா இவர்களெல்லாம் யார்?' எனக் கேட்டார். நானும், `இவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் என்பது உண்மைதான். விடுதலைப்புலிகள் அமைப்பில் பயிற்சி எடுத்தவர்கள் என்பதும் உண்மைதான். அதன்பின் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார்கள். சந்திராசாமியோடு சேர்ந்து இந்தப் படுகொலைகளைச் செய்திருக்க வேண்டும்' என ஆணித்தரமாகக் கூறினேன். நான் கூறிய விவரங்களை டேப்பில் பதிவு செய்தார் சோனியா. வெளியே வருவதற்கு முன் சோனியா என்னிடம், `இந்த வழக்கை விசாரிக்க மல்டி டிசிப்ளினரி மானிட்டரிங் ஏஜென்சி (பல் நோக்குப் புலனாய்வு அமைப்பு) ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்களிடம் இதைப் பற்றிக் கூறுங்கள். நானும் அவர்களிடம் பேசுகிறேன்' என என்னை அனுப்பி வைத்தார்.

பிறகு, சென்னை மல்லிகை விருந்தினர் இல்லத்தில் வைத்து இந்த ஏஜென்சியின் எஸ்.பி. தியாகராஜன் விசாரித்தார். நான் அவரைக் கூட்டிப் போய் பெங்களூருவில் சுரேஷ் மாஸ்டர் மறைத்து வைத்திருந்த பெல்ட்பாம், துப்பாக்கி ஆகியவை இருக்கும் இடத்தைக் காட்டினேன். சில பொருட்களை போலீஸார் கைப்பற்றினார்கள். இந்த விவகாரத்தில் உண்மையை மறைத்து, பொய்யான குற்றவாளிகளை ஆஜர்படுத்திப் பெரும் தவறு செய்துவிட்டார்கள்.

இந்த உண்மைகளை வெளியில் சொல்லாமல் இதுவரை மவுனம் காத்து வந்தேன். இந்தப் படுகொலை சம்பவத்திற்குப்பின், நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் என் மனைவியோடு நான் சேர்ந்து வாழ முடிந்தது. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், பா.ஜ.க. அரசு எனக்கு `ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்தது. இப்போது நிம்மதியாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். இதுவரை யாரும் இதைப் பற்றி என்னிடம் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. நீங்கள் கேட்டதால்தான் பேசினேன். என் மனதில் இருந்த பெரிய பாரம்
இறங்கிவிட்டதைப் போல் உணர்கிறேன்'' என்றார் எங்கோ வெறித்தபடியே.

நன்றி: http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1691:2008-12-22-18-16-49&catid=51:2008-11-26-13-26-46&Itemid=111

Dec 15, 2008

தேவதூதர்களும் தேவதைகளும்: குஷ்பு - எம். ஜி. ஆர். - ஒபாமா - கிறித்து




அய்ரோப்பிய - அமெரிக்க அரசியல் உலகில் தற்சமயம் உலாவந்து கொண்டிருக்கும் ஜோக் ஒன்று:

இளைஞன் ஒருவன் வெள்ளை மாளிகை வாயிற்காப்பாளரிடம்: புஷ் - ஷைப் பார்க்க வேண்டும். அனுமதி உண்டா?

வாயிற்காப்பாளர்: இல்லை. அவரை இங்கிருந்து வெளியே அனுப்பியாகிவிட்டது.

மறுநாள் அதே இளைஞர் மீண்டும் வாயிற்காப்பாளரிடம் “புஷ் திரும்ப வந்துவிட்டாரா?” என்று கேட்க அவர் மீண்டும் அதே பதிலைச் சொல்ல இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த விசாரிப்பும் பதிலும்.

நான்காம் நாள் சலிப்புற்ற வாயிற்காப்பாளர் “அதுதான் சொல்லிவிட்டேனே அவரை இங்கே இருந்து வெளியேற்றியாகிவிட்டது என்று. ஏன் திரும்பத் திரும்ப வந்து தொந்தரவு செய்கிறாய்” என்று எரிந்துவிழ, இளைஞர்: “இல்லை. அதை சொல்லக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்காகத்தான் திரும்பத் திரும்ப கேட்கிறேன்” என்று சொல்லி குதூகலத்தோடு அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.

தற்கால உலக அரசியல் வரலாற்றில் இன்னும் சில வாரங்களில் பதவியை விட்டு விலக இருக்கும் புஷ்ஷைப் போன்று உலக மக்களின் கடும் எதிர்ப்பையும் வெறுப்பையும் சம்பாதித்தவர் ஹிட்லருக்குப் பிறகு வேறு எவரும் இல்லை என்று சொல்வது எந்த வகையிலும் மிகையாகிவிடாது.

இதன் சிறு வெளிப்பாடே ஈராக்கில் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் புஷ் - ஷை நோக்கி ஷூக்களை எறிந்த சம்பவம்.

இதில் சுவாரசியமான மற்றொரு விஷயம் மிக வேகமாக இச்சம்பவம் ஊடகங்களால் பரப்பப்பட்டதும் இதை ஒளிபரப்பிய பலரும் மிகுந்த குதூகலத்தோடு இச்செய்தியை வெளிப்படுத்திய விதமும்.

அமெரிக்க தேர்தலின் இறுதி முடிவுகள் தெளிவுபட ஆரம்பிக்கும் சற்று முன் வரையிலும் புஷ்ஷுக்கு காவடி தூக்கிக் கொண்டிருந்த பெரும் ஊடகங்கள், காற்று வேறு திசையில் அடிப்பதை உணர்ந்தவுடன் காவடியை ‘இடது' தோளுக்கு சர்வ சாதாரணமாக மாற்றிக் கொண்டு ஒபாமா புகழ் பாட ஆரம்பித்ததை ஒரு குரூர நகைச்சுவை என்றல்லாமல் வேறு எப்படி புரிந்துகொள்வது?

பூமிப் பந்தில் உள்ள சகலத்தையும் வியாபாரப் பொருளாக மாற்றும் வல்லமை படைத்த முதலீட்டியத்தின் மிக சக்தி வாய்ந்த வடிவமாக எழுந்திருக்கும் பெரும் ஊடக நிறுவனங்களை எங்ஙனம் எதிர்கொள்வது என்பது ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட எத்தனித்துக் கொண்டிருக்கும் அனைத்து தரப்பினர் முன் உள்ள ஆகப் பெரிய சவால் என்றே தோன்றுகிறது.


சென்னை டாக்டர். அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த வன்முறை, மும்பை நிகழ்வுகள், ஈழத் தமிழர் மீதான இன அழிப்பு தாக்குதல்கள், அமெரிக்க தேர்தல், என சகல நிகழ்வுகளிலும் ஊடகங்கள் ஆற்றும் சக்தி வாய்ந்த வலதுசாரி பிரச்சாரங்களை எதிர்கொள்வதும் இன்றைய அவசியத் தேவையாகப் படுகிறது.

இன்றைய உலகின் நெருக்கடிகளுக்கு மாற்றுகள் புலப்படாத நிலையில், வெகுமக்கள் மீண்டும் மீண்டும் சரணடைவது ஏதோவொரு வகையில் மதம் சார்ந்த நம்பிக்கைகளாகவே இருப்பதும் அதை புதிய வலதுசாரி சக்திகள் வெகு திறமையாகக் கையாள்வதும் நடந்தேறிக் கொண்டிருப்பதையும் கவனிக்க முடிகிறது.

விளைவு அடிப்படைவாத சக்திகள் பலம் பெறுவது.

இதன் அவல வெளிப்பாடாகவும் கேலிக்குரிய நிகழ்வாகவும் மிகச் சமீபமாக கவனிக்க நேர்ந்த விஷயங்கள்:

முன்னதின் வெளிப்பாடாக, சமீப மாதங்களில் அமெரிக்க தேவாலயங்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதீத அளவில் அதிகரித்திருப்பது. தேவாலயங்களுக்குச் செல்பவர்கள் மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் 'கண்ணீரும் கம்பலையுமாக' இருப்பது குறித்த பாதிரிமார்களின் உணர்ச்சி பெருகிய புல்லரிப்பு.

பின்னதின் வெளிப்பாடாக, இத்தாலியில் கிறித்துமஸ் பொம்மைகள் தயாரிப்பில் உள்ளூர் சந்தையில் புகழ்பெற்ற பொம்மை உருவங்களில் ஒபாமாவும் அவரது துணைவியாரும் கிறித்துவோடு சேர்ந்து இடம் பெற்றிருப்பது (மேலுள்ள படம்). ஒபாமாவின் இந்த 'அவதாரம்' இப்போது அமெரிக்கச் சந்தையிலும் பிரபலம் அடைந்திருப்பது.

இவற்றோடு, நேற்றோ முந்தைய தினமோ, உள்ளூர் செய்திப் பத்திரிகையில் வாசித்த ஒரு செய்தி: மறைந்த முதல்வர், ‘புரச்சித் தலைவர்' எம். ஜி. ஆருக்கு அவரது ரசிகர் ஒருவர் சிலை வடிவமைத்து வழிபட்டு வருவதும், தனது மகளின் திருமணத்தை முடித்துவிட்டு எம். ஜி. ஆருக்கு கோயில் எழுப்பும் பணியில் முழுமையாக இறங்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருப்பது.

குஷ்பு - எம். ஜி. ஆர்: தமிழகம்.

கிறித்து - ஒபாமா: இத்தாலி/அமெரிக்கா.

வித்தியாசங்கள் எந்த அளவிற்கு?

ஏனோ தெரியாத்தனமாக இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு கேள்வியும் எழுகிறது. மன்னிக்க வேண்டுகிறேன். தமிழனின் “ஆதிமூலப்படிம உணர்வுக்கும்” இதற்கும் உறவு ஏதேனும் உண்டோ?!

புஷ் - ஷுக்கு செருப்படி ... ஜஸ்ட்டு மிஸ்ஸாயிடுச்சே ராசா :(






நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ள செய்தியின்படி, புஷ் - ஷை நோக்கி செருப்புகளை வீசிய அந்த இளம் தொலைக்காட்சி செய்தியாளர், அரபு மொழியில், “நாயே, ஈராக்கியர்களின் அன்பளிப்பு இது; வழியனுப்பு முத்தம் ...” என்று சொன்னபடி முதலாவது செருப்பையும், “இது எம் விதவைகள், அநாதைகள், கொலையுண்டவர்களுக்காக” என்று இரண்டாவது செருப்பையும் வீசியிருக்கிறார்.

இரண்டு செருப்புகளுமே தமது இலக்கைத் தவறவிட்டது வருத்தம் தரும் செய்தியே :(

Dec 12, 2008

ரிச்சர்ட் ரைட்

ரிச்சர்ட் ரைட் (1908 - 1960) “ஒரு குற்றவாளி எழுத்தாளரான கதை” என்பது ரிச்சர்ட் பற்றி எழுதப்பட்ட ஒரு விமர்சனக் கட்டுரையின் தலைப்பு. மிஸ்ஸிசிபி - யைச் சேர்ந்த நாட்சே பகுதியிலுள்ள பெருந்தோட்டம் ஒன்றில் மிகவும் ஏழ்மையான பின்னணியில் தோன்றியவர் ரிச்சர்ட். அம்மா பக்கவாத நோயில் வீழ்ந்த பின் சகோதரரோடு அனாதை இல்லத்தில் தஞ்சம். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நூலகங்களின் மூலம் எச். எம். மைன்கென், தியோடர் டிரெசியர், ஷெர்வுட் ஆண்டர்சன், சிங்னேர் லூயிஸ் ஆகியோரின் எழுத்துக்களை படித்துத் தீர்க்கிறார். அவரை மிகவும் பாதித்தது மென்கென். “வார்த்தைகளோடு போராடுகிற ... போராடுகிற ஒரு மனிதன் ... ஒரு தடியைப் பாவிப்பது போல ... வார்த்தைகளை ஆயுதமாய்ப் பாவிக்கும் மனிதன்” என்பது மென்கனைப் பற்றிய ரிச்சர்டின் மதிப்பீடு. கிராமப்புற தென் அமெரிக்காவின் இனவெறி, ஏழ்மை, பொது இடங்களில் கருப்பர்களைக் கொல்லும் வழக்கம் ஆகியவற்றுக்குப் பயந்து ஏராளமான கருப்பர்கள் இடம் பெயர்ந்ததை ஒட்டி 1927 - ல் ரிச்சர்ட் சிகாகோ வருகிறார். கண்ணியமான வாழ்க்கை வடக்கிலும் சாத்தியமில்லை என உணர்ந்தபோது 1930 - களின் தொடக்கத்தில் அவர் பொதுவுடைமைச் சிந்தனைகள் மற்றும் இயக்கங்களின் பால் ஈர்க்கப்படுகிறார். எழுத்தாளர்களின் மென்னியைப் பிடிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகள் அவரைக் கட்சியோடு முரண்பட வைக்கிறது. இரண்டாம் உலகப் போரில் படையில் கருப்பர்கள் மீது இன ஒதுக்கல் மேற்கொள்ளப்படுவதை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்காதபோது கட்சியிலிருந்து விலக முடிவெடுக்கிறார். “நான் கம்யூனிஸ்ட்டாக முயற்சித்தேன்” என்கிற கட்டுரைப் பகுதிகள் வெளிவந்தபோது கட்சிக்கும் அவருக்குமான உறவு முழுமையாகச் சிதைகிறது (1944). மார்க்சியத்திற்கும் இலக்கியத்திற்குமான உறவுகள் குறித்து ஆழமாகச் சிந்தித்திருந்த ரிச்சர்ட் அந்த அனுபவங்களின் பின்னணியோடு கருப்பு அமெரிக்க எழுத்துக்கள் குறித்த இலக்கியக் கோட்பாட்டுருவாக்க முயற்சிகளை மேற்கொள்கிறார். Blue Print for Negro Writing [என்ற அவரது கட்டுரை] இந்த வகையில் ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கம். ஹார்லெம் மறுமலர்ச்சியை “வெள்ளை அமெரிக்காவிடம் கையேந்தி நிற்கும் அலங்காரத் தூதுவர்களின் பணிவான நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் எனக் கேலி செய்து ஒதுக்கிய ரிச்சர்ட் எதார்த்தம் மற்றும் சமூகம் குறித்த ஒரு மார்க்சியக் கருத்தாக்கத்தைப் பரிந்துரைத்தார். இக்காலகட்டத்தில் அவரது முக்கிய ஆக்கம் Uncle Tom's Children (1938). பெண்களின் நோக்கில் அவர் எழுதியது Long Black Song. அவரது புனைவுகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது Native Son. ”[இந்நாவல்] வெளிவந்ததோடு அமெரிக்கக் கலாச்சாரம் என்றென்றைக்குமாக மாறியது” என ஓர் விமர்சகர் குறிப்பிட்டார். ஒரு எதிர்ப்பு எழுத்தாளராக இலக்கிய வரலாற்றில் ஓர் அழுத்தமான இடத்தை இந்த நூல் அவருக்கு உருவாக்கித் தந்தது. “இந்த மாதப் புத்தகம்” என மாதம் ஒரு நூலைத் தேர்வு செய்கிற "Book of the Month Club" என்னும் அமைப்பு முதன் முதலாகத் தேர்வு செய்த கருப்பர் நாவல் Native Son. மூன்று வாரங்களில் இரண்டு லட்சம் பிரதிகள் விற்பனையாயின. 1945 - ல் வெளிவந்த அவரது தன் வரலாறு Black Boy இன்னொரு முக்கிய ஆக்கம். அடுத்த பதினைந்து ஆண்டுகள் - அவரது இறுதிக் காலம் வரை - பாரிசில் கழிந்தன. சார்த்தர், சிமோன் டி பாவே ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு. சார்த்தர், காம்யூ ஆகியோரின் இருத்தலியல் சிந்தனைகளின் செல்வாக்கில் எழுதப்பட்ட ரிச்சர்டின் The Outsider 1953 - ல் வெளிவந்தது. அவரது இளம் வயது துன்ப வாழ்க்கையின் விளைவாக அவர் இயல்பிலேயே ஒரு இருத்தலியற் சிந்தனையாளராக இருந்தார் எனவும் பாரிசுக்கு வருவத்ற்கு முன்பேகூட அவரது எழுத்துக்கள் சிலவற்றில் இருத்தலியற் கூறுகள் உண்டு எனவும் சில விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். 1950 - களில் அய்ரோப்பா, அமெரிக்கா கண்டங்களைச் சுற்றிய ரிச்சர்ட் உலகளாவிய பின்னணியில் இன ஒடுக்குமுறை குறித்து சிந்தித்தார். Black Power (1954), White Men Listen (1957), The Long Dream (1958), முதலியன இக்காலகட்டத்தில் முக்கிய ஆக்கங்கள். இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவரது சிறுகதை Eight Men (Thunder's Mouth Press, NewYork, 1987) என்கிற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.  

குறிப்பு: மேலுள்ள அறிமுகக் குறிப்பு அ. மார்க்சால் எழுதப்பட்டது. இலக்கியச் சிறப்பிதழுக்காக பல மாதங்கள் பல எழுத்தாளர்களை அணுகி படைப்புகளை பிரதியெடுத்துத் தந்து மொழியாக்கம் செய்து தரக் கேட்டு அலைந்து இறுதியில் அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றபோது எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே. கடைசியில், தஞ்சையில் அ. மார்க்சின் வீட்டில் இரு வாரங்களுக்கும் மேலாகத் தங்கியிருந்து, அவர்கள் தந்த மொழியாக்கங்களை திருத்த முனைந்ததிலும் பெரும் அயற்சியே மிஞ்சியது. ஒரு கட்டத்தில், அவர்களுடைய மொழியாக்கங்களை தூர வைத்துவிட்டு புதிதாக மொழிபெயர்க்க நேர்ந்தது. அவர்களிடம் கொடுத்த கடமைக்காக, அவரவர் பெயரிலேயே மொழியாக்கங்கள் வெளியாயின. ஒரு வழியாக அவசரகதியில் படைப்புகளை மொழிபெயர்த்து முடித்தபின் உண்டான சோர்வில் எழுதத் திட்டமிட்டிருந்த விரிவான அறிமுகத்தை எழுதும் மனநிலை முற்றிலுமாக மறைந்துபோனது. அனைத்தையும் அ. மார்க்சிடம் ஒப்படைத்துவிட்டு சென்னை திரும்பினேன். மூன்று மாதங்கள் கழிந்தும் இதழ் வெளிவருவது குறித்த எந்தத் தகவலும் அவரிடமிருந்து வராதுபோனதும், விசாரித்ததில் கருப்பர் இலக்கியம் குறித்த 'விமர்சனக்' கட்டுரை எழுதும் முயற்சியில் அ. மார்க்சுக்கு எதை வாசித்து எழுதுவது என்பது விளங்காததை அறிந்து கொண்டேன். சென்னை அமெரிக்க நூலகத்தில் இருந்து அவசியமான நூல்களை சேகரித்து அவருக்கு அனுப்பியும் வைத்தேன். இரு வாரங்களில் கட்டுரை தயார். இதழில் உள்ள “ஆப்ரோ - அமெரிக்க இலக்கிய விமர்சனம்: நடந்து வந்த பாதையும் கடக்க இருக்கும் தொலைவும்”. அப்புறம் ஒரு மூன்று மாதங்கள் பல இடங்களில் இதை வைத்தே ஒரு ரவுண்டு கூட்டம். மற்றபடி, அ. மார்சுக்கு ஆஃப்ரோ அமெரிக்க இலக்கியத்தோடு எந்த ‘ஸ்நானப் பிராப்தியும்' கிடையாது என்பதை நன்கு அறிவேன். அத்தொகுப்பிற்காக நான் தேர்வு செய்து கொடுத்த படைப்புகளைத் தவிர வேறு எதையும் அதற்கு முன்னும் பின்னும் அவர் வாசித்ததில்லை; வாசிக்கப் போவதும் இல்லை. மேலுள்ள குறிப்புகளும் கூட Norton Anthology of Afro - American Literature - ல் உள்ள அறிமுகக் குறிப்புகளின் பிரதியாக்கமே தவிர வேறொன்றுமில்லை. அதிலும் கூட அவரது புரிதல் பல்லை இளிப்பதை இக்குறுநாவலை சிறுகதை என்று குறித்திருப்பதிலிருந்து அறியலாம். (பகர அடைப்புக் குறிகளில் உள்ளவை வாசகர்களுக்காக இப்போது நான் சேர்த்தவை.) அத்தொகுப்பை முழுமையாக சரிபார்த்து தனித் தொகுப்பாக கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. அது சாத்தியப்படும்போது விரிவான அறிமுகத்துடன் தமிழ் சூழலுக்கான பொருத்தப்பாடுகளையும் சுட்டி எழுதும் உத்தேசம் உண்டு.

Recent Posts