Jul 5, 2009

"மடத்” தமிழர்

தமிழர்கள் மட்டும்தான் ரசம் வைக்கிறார்களாம்

திசையெட்டும் திரிந்து நா வளர்த்த

மடத்தமிழர் சொல்லக் கேட்டதுண்டு

வழமையான ரசம்தான்

என் ரசம் அலாதி

அரிசி கழிந்த நீரில் வைத்தது அம்மாவுக்குக் கேலி

கவனம் சிதறிய ஒரு பொழுதில் உப்பு குறைய

எரும

உப்புப் போட்டுத் தின்னாத்தானே சொரண

சட்டித் தலையுள் எங்கோ ஒலித்தது வசவு

உப்பில்லாத பண்டம் குப்பையிலே

எவரோ சொன்னது

பழந்தமிழர் வீரமறவராம்

இருக்கலாம்

மற்றவர்க்கு எப்படியோ

எதிலும் உப்பு கொஞ்சம் மட்டு எனக்கு.


11.02.94


குறிப்பு:


கவிதை எழுத ஆரம்பித்த புதிதில் ‘கவிதை மாதிரி' எழுதி வைத்தது. ஈழம் குறித்து தற்போது எழுதப்பட்டு வரும் ஆகக்கேடான விஷயங்கள் குறித்து எழுத உட்கார்ந்து புரட்டிக் கொண்டிருந்ததில் கண்ணில் பட்டது. கணிசமான மாற்றங்களுடன் திருத்தி எழுதி பதிவில்.


“மடையன்” என்பதற்கு சமையல்காரன் என்ற பொருளும் உண்டு.

Jun 21, 2009

குறுக்குக் கணக்குச் சூத்திரம் - Piracy (கடற்கொள்ளை) - பகற்கொள்ளையருடன் இரு சந்திப்புகள்

கணக்குல நான் கொஞ்சம் வீக் என்று முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

எந்த அளவுக்கு ‘வீக்' என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

1 2 3 4 5 6 7 8 9

அதற்கப்புறம் எண்ணச் சொன்னால் குண்டக்க மண்டக்கதான்.

"சார் 0 - க்குத்தான் மதிப்பே இல்லைன்னு சொல்றீங்களே; அப்புறம் அதச்சேத்து இன்னொரு நம்பர் சொல்லச் சொல்றீங்களே" என்று முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிடுவேன்.

பொய் சொல்கிறேன் என்று தெரியும். ஆனால், நீட்டி முழக்கி எங்கோ கொண்டு போய் விட்டுவிடுவார்கள் என்ற பயம்.

வாய்ப்பாடு சொல்லித்தர ஆரம்பித்தபோதும் தகராறுதான். பதினாறாம் வாய்ப்பாடு வரைக்கும் சில எளிமையான குறுக்குவழிகளை கண்டுகொண்டு தப்பித்துவந்தேன். இடையில் இந்த 14 வது வாய்ப்பாடு ஒரு பெரிய இடறலான விஷயமாக எரிச்சலைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்யக் கண்டு கொண்டிருந்த குறுக்கு வழிக்கு ஒரு உதாரணத்தையும் சொல்கிறேன். 13 ஆம் வாய்ப்பாட்டை எடுத்துக் கொண்டால் 13x2= 26 13x3=39 13x4=42 இப்படிப் போகும். ஆக, கடைசி எண்ணில் 3 கூட்டிக் கொண்டே போகவேண்டும்; முதல் எண்ணில் 1 கூட்டிக் கொள்ள வேண்டும். கடைசி எண் 7, 8, 9 வந்தால் முதல் எண்ணில் 2 கூட்டிக் கொள்ள வேண்டும். 13, 26, 39, 52, 65, 78, 91, 104, 117, 130 ... இப்படி.

இப்படியாகத்தான் பெருக்கலோடு கூட்டலை ஒருமாதிரி கலந்துகட்டி எப்படியோ பள்ளிக்காலத்தை ஓட்டி விட்டேன்.

இந்த லட்சணத்தில் கட்சிக்குப் போய் வீடு திரும்பியபோது கல்லூரிக்குப் போக மனமில்லாமல் இருந்தது. பலரது வற்புறுத்தல் தாங்காமல் அஞ்சல் வழிக் கல்வியில் ‘மேற்படிப்பைத்' தொடர ஒப்புக் கொண்டேன். ஆனால், "வினை" என்னை எப்படி விடும்! அஞ்சல் வழிக் கல்வியில் B. Sc Maths - ஐ ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன்.

கடைசி வரையில் முதலிரண்டு ஆண்டுத் தேர்வுகளில் ஆங்கிலம் - தமிழ் இரண்டு பாடங்களைத் தவிர எதையும் எழுதவே இல்லை. ஆனால், B. Sc Maths படிக்கிறார் என்று கதை பரவ, அதை வைத்தே 10 ஆம் வகுப்பு வரைக்கும் வீட்டில் டியூஷன் எடுத்து அதிகபட்சமாக மாதம் 1,500 வரை சம்பாதிக்க முடிந்ததை ஒரு சாதனை என்றல்லாமல் வேறு எப்படிச் சொல்வது!

சம்பாதித்த சாகச உணர்வு இரண்டு மூன்று வருடங்களுக்கு திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைகளில் கொண்டுபோய் விட்டது. எனது வழமையான தேடல்களுக்குத் தீனி போட்ட புத்தகங்கள் தவிர்த்து அவ்வப்போது உயர் கணிதம் குறித்த எளிமையான அறிமுகப் புத்தகங்களும் வாங்கி வைத்துக் கொள்வதுண்டு. டியூஷன் எடுக்க உதவும் என்ற காரணம் தவிர வேறு என்ன.

ஒரு சமயம் இரண்டு + 2 படித்த பிள்ளைகளுக்கு கணிதப் பாடம் டியூஷன் எடுக்க ஒப்புக் கொண்டபோது, இந்தக் கணிதப் புத்தகங்கள் கைகொடுத்ததை குருட்டு அதிர்ஷ்டம் என்று ஒப்புக்கொள்ளவும் வேண்டும்.

அப்படியான நூல் ஒன்றிலிருந்து கற்றுக் கொண்ட குறுக்கு வழிக் கணிதச் சூத்திரம் ஒன்றையும் அதன் சுவாரசியம் கருதி பகிர்ந்து கொள்கிறேன். இதுவும் மேலே சொன்ன பெருக்கலுக்கு கூட்டலைக் கலந்து கட்டி அடிக்கும் கதைதான். எண்கள் கொஞ்சம் பெருசு, கூட்டலுக்கு பதில் பெருக்கல். அவ்வளவுதான் வித்தியாசம்.

1 லிருந்து 100 வரையிலான எண்களைக் கூட்டினால் என்ன வரும் என்பது கேள்வி.

ஒவ்வொரு எண்ணாகக் கூட்டிக் கொண்டு போனால் கொஞ்ச நேரத்தில் தலை சுற்ற ஆரம்பித்துவிடும் (எனக்கு). நிச்சயம் எங்காவது பிழை விட்டுவிடுவேன்.

ஆனால், குறுக்கு வழிதான் இருக்கிறதே! அஃதாவது பின்வருமாறு:

1 2 3 4 ... 97 98 99 100 என்று வரிசையாக எழுதி வைத்திருப்பதாக கற்பனை செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல 100 99 98 97 ... 4 3 2 1 என்று தலைகீழ் வரிசையில் அதனடியில் இன்னொரு வரிசை.

1 2 3 4 ... 97 98 99 100
100 99 98 97 ... 4 3 2 1 என்பதாக.

இப்போது மேலுள்ள எண்ணையும் கீழுள்ளதையும் கூட்டிப் பாருங்கள். ஒவ்வொன்றும் 101 ஆக இருக்கும். (1+100, 2+99, 3+98 ...)

ஆக 100 முறை 101. அதாவது 100 பெருக்கல் 101 (100 x 101). ஆனால், இது இரண்டுமுறை கூட்டுதலாகிவிடும் என்பதால் அதை இரண்டால் வகுக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் 50 x 101=5050.

எப்படி இருக்கிறது! (கணக்கு வாத்தியார்கள் யாராவது வந்து என்னை உதைக்காமல் இருந்தால் சரி).

இதுவெல்லாம் கதையாக எழுத வைத்திருந்த விஷயங்கள். ஆனால், எவ்வளவுதான் பிரயத்தனம் செய்தாலும், நான் - ஃபிக்‌ஷன் ஆசாமிதான் என்று கழுதையாகக் கத்தினாலும் யார் ஒப்புக்கொள்ளப்போகிறார்கள். "இல்லை சாமி, நீங்க non - fiction ஆளுதான்," என்று அடித்துப் பேச இங்கே 'சதிகார' நண்பர் கூட்டம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறதே :)

அது கிடக்கட்டும். மேலே சொன்ன குறுக்கு வழியை lateral thinking என்பதற்கான எளிமையான உதாரணமாக, Edward de Bono, தனது Serious Creativity என்ற நூலின் ஆரம்பப் பக்கங்களில் காட்டியபோது கொஞ்சம் அசந்துதான் போய்விட்டேன்.

அதுவும் கிடக்கட்டும்.

இதையெல்லாம் இங்கு பகிர்ந்து கொள்வதன் நோக்கம் முற்றிலும் வேறு. 'நம்' திருட்டு கம்யூனிஸ்ட் கட்சி (CPI) காம்ரேடுகளைப் பற்றி எங்கிருந்து தொடங்கிப் பேசுவது என்ற குழப்பத்தில் ஏதோ மனம் போன போக்கில் எழுதியது.

மேலே காட்டிய "குறுக்கு வழிக் கணக்குச் சூத்திரங்களால்" யாருக்கும் எந்தப் பாதகமும் வரப்போவதில்லை. திருட்டுக் கணக்கெல்லாம் இதை வைத்துக் காட்டிவிட முடியாது. 'திருட்டு' (Piracy என்பதைக் குறிப்பிடுகிறேன்) என்பதற்குக்கூட இன்றைய கணிணி - வலை உலக யுகத்தில் வேறு அர்த்தங்களும் பயன் மதிப்புகளும் உருவாகி இருப்பதை உணர்ந்தே இருக்கிறேன். Copy - right, Copy - left, Fair Use Principles, Shareware, Freeware போன்ற கருத்தாக்கங்களை ஓரளவிற்கு புரிந்தும் இருக்கிறேன். (விரிவான அர்த்தங்களைப் புரிந்துகொள்ளும் முயற்சியிலும் இருக்கிறேன்).

ஆனால், இந்தப் பதிப்புரிமை (copyright) என்பது குறித்த அடிப்படை விஷயங்களைக் கூட அறிந்துகொள்ளாமல் பலர் சகட்டு மேனிக்கு உளறுவதைக் காதுகொடுத்துக் கேட்க முடியவதில்லை. Copyright என்று சொன்னாலே அது ஒரு ‘முதலாளியக் கருத்தாக்கம்' என்று சில இணைய மேதாவிகள் சீறிப்பாய்வதை ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் கண்டும் இருக்கிறேன்.

விரிவாக தற்போது சாத்தியம் இல்லையென்றாலும் ஒரு சில புள்ளிகளை மட்டும் இங்கு பதிவு செய்ய விருப்பம் (இவற்றை “இசையின் அரசியல்” என்ற நூலிலும் சற்று விரிவாக விளக்க முயற்சி செய்திருக்கிறேன்).

1. பதிப்புரிமை என்ற கருத்தாக்கமும் அது குறித்த சட்டங்களும் முதலீட்டிய சமூகத்தின் செவ்வியல் காலப்பகுதியில் உருவாகி படிப்படியாக வளர்ச்சி பெற்றவை. முதலீட்டியத்தின் மிக ஆரம்பகாலப் பண்டங்களில் ஒன்று நூல்கள். முதலீட்டிய செவ்வியல் காலப்பகுதி உச்சத்தில் இருந்த காலங்களில் நூல்களோடு மற்றொரு முக்கிய பண்டமாக சேர்ந்துகொண்டது இசைக் குறிப்புத் தாள்கள் (music sheets).

2. தனிப்பட்ட ஆசிரியர்களின் ஆக்கங்களுக்கு செல்வாக்கு மிகுந்தபோது, அதன் விளைபயன்களைப் பகிர்ந்துகொள்வதில் நூல்களை அச்சிட்ட முதலீட்டு நிறுவனங்களும் அவ்வாக்கங்களை உருவாக்கிய ஆசிரியர்களும் அதைப் பகிர்ந்துகொள்வதற்கு ஏதுவாக படிப்படியாக உருப்பெற்றதே copyright என்ற கருத்தாக்கமும் அது குறித்த சட்டங்களும் (இசைக்குறிப்புகள் எழுதியோருக்கும் இது பொருந்தும்).

3. ஒருவகையில் முதலீட்டு நிறுவனங்களே மொத்த பயனையும் அள்ளிக் கொண்டு போவதில் இருந்து தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள எத்தனித்த படைப்பாளிகளின் தொடர்ந்த முயற்சியில் உருவானவையே இச்சட்டங்கள். ஒரு படைப்பாளியின் ஆக்கங்களுக்கு எந்த அளவிற்கு செல்வாக்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர் முதலீட்டு நிறுவனத்தின் லாபத்தை இதன் வழி கட்டுப்படுத்துபவராக இருக்கிறார். (முதலீட்டு நிறுவனம் இதை வேறு வழிகளில் ஈடுசெய்யலாம் - தொழிலாளர்களை அதிகம் சுரண்டுவது, ஆக்கங்களை அதிகப் பிரதியாக்கம் செய்வது, பண்டத்தின் விலையை அதிகமாக்குவது ...)

4. இந்நோக்கில் நவீன படைப்பாளிகள் முதலீட்டியத்தோடு இணைந்து உருவான பாட்டாளி வர்க்கத்தின் நிலையிலிருந்து மாறுபட்டவர்கள். முதலாளிய வர்க்கத்தோடு இணைந்து உருவான பாட்டாளி வர்க்கம் அடிமைத் தளையுடனேயே உருவானது. தனது தளைகளை உடைக்க போராடுகிறது. முதலாளிய வர்க்கத்தின் உருவாக்கத்தோடு இணைந்தே உருப்பெற்ற நவீன படைப்பாளிகள் தமது படைப்பாக்கத்தின் மறு உருவாக்கத் திறனின் தன்மையைப் பொறுத்து - அது சமூகத்தில் உருவாக்கும் மதிப்பைப் பொருத்து முதலாளிய வர்க்கத்தின் தளைகளில் இருந்து விடுபட்டவர்களாக, ஏன் அவ்வர்க்கத்தின் நலன்களையும் அது பெறும் பலன்களையுமே கட்டுப்படுத்துபவர்களாக உருவாகிறார்கள்.

5. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தொடங்கிய 'தொழில்நுட்பப் புரட்சிகள்' சில, முதலாளிய உற்பத்தி முறையில் கொண்டு வந்தள்ள சில மாற்றங்கள் பொருளுற்பத்தி முறையிலும் அவற்றின் நுகர்ச்சியிலும் சில அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. ஒரு பண்டத்தின் அடிப்படை மாதிரியை பிரதியாக்கம் செய்வது (உற்பத்தி) அதற்கு முன்னர்வரை தொழிற்சாலை அமைப்பிற்குள்ளாக மட்டுமே நிகழமுடியும். ஆனால், இப்போது நுகர்வாளர்களும் பிரதியாக்கம் செய்ய முடியும் (டேப் ரிக்கார் காஸெட்டில் ஆரம்பித்து, சிடி, டிவிடி வரையிலான பண்டங்கள், நுகர்வாளர்களே இசை ஆக்கங்களை பிரதியெடுப்பதை சாத்தியப்படுத்தியுள்ளன. Xerox machine தொடங்கி மின்நூல்களின் வடிவங்கள், நூலாக்கங்களையும் நுகர்வாளர்களே பிரதியெடுத்துக் கொள்வதை சாத்தியப்படுத்தியுள்ளன.)

6. பண்டங்களின் பிரதியாக்கத்தில் நிகழ்ந்துள்ள இந்த நகர்வு அல்லது தளர்வு (தொழிற்சாலை அமைப்பிற்குள் இருந்து நுகர்வாளர்களின் இல்லங்களுக்கு அல்லது அடுத்த கட்ட சிறு வணிகத்திற்கு) இன்னும் முதலீட்டிய சந்தைப் பொருளாதார நுகர்வுச் சுழலில் இருந்து விடுபடவில்லை என்ற போதிலும், முதலீட்டியத்தின் கட்டுப்பாட்டு - கண்காணிப்பு அமைவில் மாற்றம் நிகழ்ந்திருப்பதையும் நமக்கு சுட்டிக் காட்டுபவை.

7. பண்டச் சுழற்சியில் நிகழ்ந்துள்ள இந்த பிரதியாக்கச் சுதந்திரமும் இதை உருவாக்கியுள்ள தொழில்நுட்ப நகர்வுகளும் piracy, napster, torrent, fair use principles, shareware, freeware இன்னபிற கருத்தாக்கங்களையும் நடைமுறைகளையும் சாத்தியமாக்கியிருக்கின்றன. ஆனால், இவை படைப்பாளிகளின் copyright என்ற கருத்தாக்கத்திற்கும் பலன்களுக்கும் எதிரானவை அல்ல. மாறாக, சரியான வழிகளில் முதலீட்டியத்திற்கு எதிராக இணைக்கப்படவேண்டியவை.

அதற்கான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் நடைமுறைகளையும் வகுக்க வேண்டியதும் ஒரு முக்கிய பணியாக இருக்க வேண்டும்.

இந்த மண்டைக் குடைச்சலான பணிகள் ஒரு பக்கம் இருக்க, தொழிலாளர்களின் நலன்களுக்கான (சும்மா வாய்ப்பேச்சுக்குத்தான்) கட்சியாக தம்பட்டமடித்துக் கொள்ளும் ஒரு கட்சியின் (CPI) வெளியீட்டு நிறுவனம் பல வருடங்களாக பல படைப்பாளிகளின் ஆக்கப்பூர்வமான உழைப்பைத் திருடி, படைப்பாளிகளுக்குச் சேரவேண்டிய ஒட்டுமொத்த பயனையும் அபகரித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே கி. ரா - வின் விஷயத்தில் அம்பலமானபோதும் அந்த நிறுவனத்துக்கோ அது சார்ந்த கட்சிக்கோ இது சம்பந்தமாக எந்தவிதமான கூச்ச நாச்சமும் இருக்கவில்லை. தமது பகற்கொள்ளையைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

நேர்மையான மனிதர் என்பதாக வேடமிடும் அதன் தலைவர் நல்லகண்ணுவின் கவனத்திற்கு பலமுறை இந்த விஷயங்கள் கொண்டு செல்லப்பட்ட போதும் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. இப்போது, மீண்டும் பிரபஞ்சன், எஸ். பொ உள்ளிட்ட பல மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் திருடியதில் “பலநாள் திருடர்கள்” மாட்டியிருக்கிறார்கள்.

ஆனால், இதன் பரிமாணங்கள் அவ்வளவு சாதாரணமானவை அல்ல.

பாவை பதிப்பகத்தின் நூல்களை NCBH வெளியீடுகளைப் போல விற்பனை நிலையங்களில் சாதாரணமாகப் பார்க்க முடியாது. பாவை பதிப்பகம் NCBH -ன் பினாமியைப் போன்றது. பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டமாக வைக்கப்படும் நூல்களை அச்சிட்டு விற்பதே இதன் பிரதான வேலை.

முதலில், ஒரு புத்தகத்தை 1000 அல்லது 2000 பிரதிகள் அச்சிடுவார்கள். இவர்களது துணை அமைப்புகளில் (ஆசிரியர் அமைப்புகள் அல்லது கலை இலக்கியப் பெருமன்றம்) உறுப்பினராக உள்ள அல்லது நெருக்கமாக உள்ள ஆசிரியர்களைக் கொண்டு அந்த நூலை பல்கலைக் கழகத்தில் பாடமாக ஏற்கச் செய்வார்கள். அதன் பின் 20,000 பிரதிகள் 30,000 பிரதிகள் அச்சிட்டு விற்பார்கள்.

இதில் விற்பனைச் சிரமமும் இல்லை. பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளுக்கு நேராகச் சென்று மொத்த தொகையைப் பெற்றுக் கொண்டு புத்தகத்தை கொடுத்துவிட்டு வருவதுதான் வேலை. ஆக, இது ஒரு திட்டமிட்ட பகல் கொள்ளை. சில கேடுகெட்ட ஆசிரியப் பெருந்தகைகளும் சில பினாமிப் பதிப்பகங்களும் கடந்த பத்து வருடங்களாக இதுபோன்ற கொள்ளை வணிகத்தில் ருசி கண்டிருக்கின்றன என்பதே நிலவரம்.

திருட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் (CCPI - Cheat Communist Party of India) 'நேர்மையான தலைவர்' நல்லகண்ணுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இதை நான் வெளிப்படையாகவே சுட்டிக் காட்டினேன். ஆனால், மனுசன் அசரவில்லை.

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் 90 கல்லூரிகள் இருக்கின்றன. திருடித் தொகுப்பட்ட, எமது படைப்புகளைக் கொண்ட "தெரிவு" தொகுப்பு, இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தமிழ்த் துறை மாணவர்களுக்குமான பாடம் மட்டுமே அல்ல. அனைத்து பட்டப் படிப்பு மாணவர்களும் இத்தொகுப்பை வாங்கியாக வேண்டும். சராசரியாக ஒரு கல்லூரியில் 500 இளங்கலை மாணவர்கள் படிக்கிறார்கள் என்று எடுத்துக் கொண்டால் கூட (500 x 90) 45000 பிரதிகள் அச்சிடவேண்டும். தொகுப்பின் விலை 45 ரூ. அதன் தயாரிப்புச் செலவு 10 ரூ க்கு மேல் தாண்டாது. விநியோகம், இடைத்தரகர்களுக்குப் போகும் கமிஷன் (அதுவும் உண்டு) அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஒரு பிரதியில் உங்களுக்கு 25 ரூ இலாபம் இருக்கிறது. அப்படியென்றால் 45,000 பிரதிகளுக்கு எவ்வளவு என்று கேட்கவும் செய்தேன். (இத்தனைக்கும் இது முதல் ஆண்டுக்கான கணக்கு மட்டுமே. தொகுப்பு 3 ஆண்டுகள் பாடத்திட்டத்தில் கட்டாயமாக இருக்கும்.) ஆனால், திருடனுக்கு கணக்கு காட்டினால் என்னதான் நடக்கும். NCBH -ன் நிர்வாக இயக்குனர் துரைராஜின் முகத்தில் ஈயாடவில்லை. எரிச்சல்தான் பட்டார்கள். “இதையெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது” என்றார் துரைஜெயராஜ்.

எனக்காவது அவர்கள் கட்சியின் மீது எந்த நம்பிக்கையும் இருந்தது கிடையாது. பிரபஞ்சன் அக்கட்சியின் கலை இலக்கிய அமைப்பினரோடு நீண்ட காலம் இணைந்து பல காரியங்கள் செய்தவர். அவருக்குத்தான் ஜீரணித்துக் கொள்ள இயலாத அதிர்ச்சி.

நானும் பிரபஞ்சனும் இரண்டு மணிநேரம் பேசியும் அவர்களின் நிலை ஒன்றே ஒன்றாகத் தான் இருந்தது. “நாங்கள் 22,000 பிரதிகள்தான் அச்சிட்டிருக்கிறோம். பத்து சதவீதம் ராயல்டியைக் கொடுத்து விடுகிறோம்.”

நான் மீண்டும் தலையிட்டு, “அதுசரி. பத்து சதவீதம் ராயல்டி என்பதை எங்களிடம் ஒரு சிறு அனுமதி பெற்று வெளியிட்டிருந்தால் ஏற்றுக்கொள்வதில் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், இதற்குப் பின் இத்தனை தகிடுதத்தங்கள் இருக்கின்றன. இது அப்பட்டமான பகற்கொள்ளை. அதற்கான அபராதமாக நீங்கள் ஒரு தொகையை எங்கள் ஐவருக்கும் தரவேண்டும்,” என்றேன். அப்போதுதான் 'நேர்மையான தலைவர்' சீறிப்பாய்ந்து, “அதெல்லாம் முடியாது. அப்படித் தந்தால், நாங்கள் திருடியதை ஒப்புக் கொண்டோம் என்று ஆகிவிடும்,” என்றார்.

"நாங்கள் தவறு செய்திருக்கிறோம் என்பது உண்மை. ஆனால், இதற்கு மேல் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது, " என்றார் துரைராஜ்.

தொடர்ந்து பேசுவதில் ஒரு பயனும் எங்களுக்கு இருக்கவில்லை.

“அப்படியானால், இரண்டாவது பதிப்பை வெளிடக்கூடாது. இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நான் வழக்கு தொடுக்க வேண்டியிருக்கும்,” என்றேன்.

“தாராளமாகச் செய்து கொள்ளுங்கள்,” என்றார் துரைராஜ்.

ஒருவாரம் கழித்து, என் வீட்டிற்கு ராயல்டி தொகையுள்ள காசோலையுடன் எனது கையொப்பம் கேட்டு ஒரு கடிதத்தையும் கொண்டு வந்தார்கள் அந்நிறுவனத்தின் இரு ஊழியர்கள். கடிதம், பேச்சுவார்த்தையின்படி நான் பணத்தைப் பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டதைப் போல இருந்தது. எனக்கு சீற்றம்தான் வந்தது.

“இதில் நான் கையொப்பமிட முடியாது. இதில் எந்த விபரமும் இல்லை. முதல் பதிப்புக்கு என் அனுமதி பெற்றிருக்கவில்லை என்பதையும் இரண்டாம் பதிப்பிற்கு அனுமதி இல்லை என்பதையும் குறிப்பிட்டு எழுதி வாருங்கள், கையொப்பமிடுகிறேன். காசோலையும் பெற்றுக் கொள்கிறேன்,” என்று காசோலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேன். சென்றவர்கள் பதிவுத் தபாலில் காசோலையை மட்டும் அனுப்பி வைத்தார்கள். எனக்கு நியாயமாகச் சேர வேண்டியதை பெற்றுக் கொண்டேன். (கென், உண்மைத் தமிழன் இதுவே நிகழ்ந்தது.)

இப்போது, ஒரு வருடம் கழித்து, கடந்த வாரத்தில் ஒருநாள் காலை, அதே பகற்கொள்ளை நிறுவனத்தின் ஊழியர்கள் எனது வீடுதேடி வந்தார்கள். இரண்டாம் பதிப்பிற்கு அனுமதி கேட்டு. ஒரு வருடத்திற்கு முன்னரே எனது அனுமதி கிடையாது என்று தெளிபடுத்திவிட்டேனே என்று தெரிவித்தேன்.

அவர்களுக்குப் பேச எதுவும் இருக்கவில்லை. அமைதியாக திரும்பிச் சென்றவர்கள், ஒரு மணிநேரத்தில் தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்டர்கள். “எங்கள் நிறுவனத்தின் தலைவர் துரைராஜ் உங்களை நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறார், வரலாமா?” என்று கேட்டார்கள். நானும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

அடுத்த இரண்டு மணிநேரத்தில், துரைராஜ் எனது வீட்டில்.

வந்தவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா!!!

“உங்களுக்குப் பூர்வீகம் சென்னைதானோ,” என்று குசல விசாரிப்புகளில் தொடங்கி,

“ஏன் தோழர் நீங்கள் மா - லெ இயக்கத்தில் இருந்திருக்கிறீர்களா? நான் கூட ஆரம்பத்தில் மா - லெ இயக்கத்தில்தான் இருந்தேன்.”

“ஏன் தோழர் நீங்கள் எங்களுக்கு ஒரு புத்தகம் எழுதித் தரக்கூடாது?”

(நீங்கள்தான் என்னைக் கேட்காமலேயே புத்தகம் போட்டிருக்கிறீர்களே. அப்படியே தாராளமாக செய்துகொள்ளாலாமே! என்று நான் கேட்கவில்லை).

“லத்தீன் அமெரிக்க அரசியல் சூழல் பற்றி எழுதித் தந்தால் ரொம்ப உதவியாக இருக்கும் தோழர்.”

“அது சம்பந்தமாக எதுவும் படிக்கலைங்க. ஈழ நிகழ்வுகளைத் தான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்பாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். ” இது நான்.

“ஓ! அப்படீங்களா? சரி தோழர், பிராபகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

இப்போது எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. சினத்தை காட்டிக் கொள்ளாமல், எவ்வளவு நேரம்தான் இப்படி பேசிக் கொண்டிக்கிறார்கள் பார்க்கலாம் என்று பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு அரை மணி நேரத்திற்கு இப்படி கேள்வியும் பதிலுமாக நீண்டு கொண்டிருந்த பேச்சு அதிர்ஷ்டவசமாக ஒரு நண்பரின் வருகையால் நின்றது. நண்பரை எனது அறையில் அமர்த்திவிட்டு அவரையும் கூட வந்திருந்த மற்றொருவரையும் அழைத்துக் கொண்டு முகப்பு அறைக்குச் சென்றேன்.

இப்போது துரைராஜ், “சரிங்க தோழர். நான் வந்த விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். இரண்டாவது பதிப்பிற்கு உங்கள் அனுமதி வேண்டும். மாணவர்களின் நலன் கருதி நீங்கள் இதற்கு சம்மதிக்க வேண்டும்.”

“உங்களது உண்மையான அக்கறை மாணவர்களின் மீதல்ல. எனது அனுமதியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பது மட்டும்தான். நீங்கள் செய்திருப்பது ஒரு திருட்டு என்பதையும், இரண்டாம் பதிப்புக்கு அனுமதி நிச்சயம் தரமுடியாது என்றும் ஒரு வருடத்திற்கு முன்பே தெரிவித்து விட்டேன். எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை,” என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்.

“பாத்துங்க தோழர், பரிசீலனை செய்யுங்க தோழர், பரிசீலனை செய்யுங்க தோழர்,” என்று எழுந்து கொண்டே அவர் உதிர்த்த வார்த்தைகளை, அரைகுறையாக வாங்கிக் கொண்டே காத்திருந்த நண்பருக்காக எனது அறைக்குத் திரும்பிவிட்டேன்.

எந்த விதமான யோக்கியதையும் அற்ற உங்களைப் போன்ற பகற்கொள்ளைக்காரரோடு இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்ததே என் தவறு என்று மனதில் தோன்றிய சீற்றத்தை வெளிப்படுத்தவில்லை.

நட்பான வழுக்குரைஞர் ஒருவரை நாளை சந்திக்கவும் இருக்கிறேன்.

Jun 19, 2009

கார்ப்பரேட் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் [CCPI] தகிடுதத்தங்கள்


என் மதிப்பிற்குரிய மூத்த நண்பர்களில் ஒருவரும் எழுத்தாளருமான திரு. பிரபஞ்சன் அவர்களின் இக்கட்டுரையை (உயிர்மை ஜூன் இதழில் வெளிவந்துள்ளது) அவரது அனுமதி பெற்று இங்கு பதிவில் ஏற்றுகிறேன். நட்சத்திரக் குறியிட்டுள்ள இடம் அச்சில் விடுபட்டுப் போயிருந்தது. தொலைபேசியில் அவரிடம் கேட்டு அடைப்புக்குறிகளுக்குள் அச்சிறுபகுதியை சேர்த்திருக்கிறேன். மற்றது, இது குறித்துப் பகிர எனக்கும் சில விஷயங்கள் உண்டு. அவையும் வரும்.


---------------------------------------
4 பேராசிரியர்களும் ஒரு பதிப்பகமும் - இலட்சியக் கூட்டணி

பிரபஞ்சன்

நான்கு பேராசிரியர்களும் ஒரு பதிப்பகமும் சேர்ந்து செயல்படுத்தியிருக்கும் ஒரு பெரிய, பல பரிமாணங்கள் கொண்ட ஊழலைத் தமிழ் நிலத்துக்கு வெளிப்படுத்த வேண்டியது என் கடமையாகிறது.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ‘அகல்யா' என்ற பெயரில் ஒரு நவீன நாடகத்தை நான் எழுதி இருந்தேன். அகல்யாவும் முட்டை என்ற நாடகம் இரண்டையும் இணைத்து, ‘முட்டை' என்ற பெயரில் நண்பர் கவிஞர் மீர அவரது பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார். அதன் அண்மைப் பதிப்பொன்றும் வெளிவந்திருக்கிறது. அகல்யா நாடகத்தை பேராசிரியர் அ. ராமசாமி இயக்கிப் புதுச்சேரியில் மிகச் சிறப்பாக அரங்கேற்றி இருக்கிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் பாவை பப்ளிகேஷன்ஸ் (142, ஜானினாகான் சாலை, இராயப்பேட்டை, சென்னை -14) என்கிற புத்தக நிறுவனம், என் அகல்யா நாடகத்தையும் சேர்த்து ஐந்து நாடகங்களைக் கொண்ட நாடகத் தொகுதி ஒன்றைத் ‘தெரிவு' என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறது. அந்த ஐந்து நாடகங்களாவன -

1. அகல்யா - பிரபஞ்சன்
2. பரமபதம் - வளர்மதி
3. முள் - எஸ். பொன்னுதுரை
4. வேதாளம் சொன்ன கதை - தி. சு. இளஞ்செழியன்
5. குமாரின் கொலை வழக்கு - காஸ்யபன்

இந்த ஐந்து நாடகங்களையும் தொகுத்து தெரிவு என்ற பெயரில் பாவி பப்ளிகேஷன்ஸ் புத்தக நிறுவனம் (ரூ 35 விலையில்) வெளியிட்டிருக்கிறது. தொகுத்துக் கொடுத்தவர்கள் -

1. முனைவர் கா. வாசுதேவன், எம். ஏ., எம். ஏ., எம். பில், பிஎச்.டி. முதுநிலை தமிழ் விரிவுரையாள. பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி), திருச்சி - 620 023.

2. முனைவர் மு. அருணாசலம், எம்.ஏ., எம்.பில், பிஎச். டி முதுநிலை தமிழ் விரிவுரையாளர், பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி, திருச்சி.

3. முனைவர் வ. நாராயணநம்பி, பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி, திருச்சி.

4. ம. இளையராஜா எம். ஏ., எம்.பில், பிஎச்.டி. தமிழ் விரிவுரையாளர், ஏ.வி.சி. கல்லூரி (தன்னாட்சி), மயிலாடுதுறை.

இந்த நான்கு பேராசிரியர்கள் எங்கள் ஐவரின் நாடகங்களைத் தொகுத்துப் பாவை பப்ளிகேஷர்சுக்குத் தந்தவர்கள். இந்த நபர்கள் தங்கள் அணிந்துரையில், “தெரிவு தொகுப்பு நூல் முயற்சிக்குப் படைப்புகளை அளித்த படைப்பாளிகளுக்கு - நன்றி கலந்த ணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். கவனிக்கவும், வணக்கங்களை அல்ல, ணக்கங்களை. பாவை பதிப்பகத்தின் அச்சு நேர்த்திக்கு இது ஒரு உதாரணம்.

இந்தப் பேராசிரியர்கள் தங்கள் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, தெரிவு தொகுப்பு நூல் முயற்சிக்குப் படைப்புகளை அளித்த படைப்பாளிகளில் நானும் ஒருவன் அல்லன். இந்தப் பேராசிரியர்கள் எவரும் என் அனுமதியை இந்தத் தொகுப்பு முயற்சியில் கேட்டுப் பெறவில்லை. என்னிடம் மட்டுமல்ல, நாடக ஆசிரியர்கள் வளர்மதி, எஸ். பொன்னுதுரை ஆகியோரிடமிருந்தும் அனுமதி பெறவில்லை. மற்ற இரண்டு நாடக ஆசிரியர்களிடமும் அந்த நபர்கள் அனுமதி பெற்றிருக்கமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்.

என் அனுமதி பெறாமலும், எனக்குத் தெரியாமலும் என் நாடகத்தைப் பயன்படுத்திக் கொள்வது என்பதற்கும், எனக்கு உரிமையான ஒன்றை என் அனுமதி பெறாமல் எடுத்துக் கொள்வதற்கும் என்ன பெயர்? முனைவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அதற்குப் பெயர் திருட்டு. இன்னொரு பழஞ்சொல் கள்ளம் என்பது.

இலக்கியப் பொறுப்பும் சமூகப் பொறுப்பும் அற்ற நான்கு பேராசிரியர்கள் ஐந்து படைப்பாளிகளின் நாடகங்களைத் தொகுத்துக் கொண்டு வந்து கொடுத்தால், ஒரு நாணயமுள்ள பதிப்பகம் என்ன செய்திருக்க வேண்டும்? தொகுப்பாளர்களிடம், “படைப்பாளர்களின் அனுமதிக் கடிதம் பெற்றீர்களா?” என்று கேட்டு, அந்தக் கடிதத்தைக் கண்ணுற்று இருக்க வேண்டும். அதன்மேல் பதிப்பகம், தொடர்புடைய படைப்பாளர்களிடம், ‘ராயல்டி' தொடர்பான விஷயங்களைப் பேசித்தீர்த்து, உடன்பாட்டை எழுத்துப்பூர்வமாக வடிவமைத்து, ஒரு பிரதி படைப்பாளர்களிடமும் ஒரு பிரதி பதிப்பகத்திடமும் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும். உரிய காலத்தில் முதல் பதிப்புக்கான ராயல்டி தொகையை அளித்து முடித்து, பதிப்பகம் விரும்பினால் இரண்டாம் பதிப்புக்கான புதிய உடன்படிக்கை எழுதப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும்.

யோக்யப் பொறுப்பும், எழுத்து, இலக்கியம், கலாச்சாரம் ஆகியன மேல் மரியாதையும் கொண்ட பதிப்பகம் இதைத்தான் செய்யும், பாவை பதிப்பகம் என்னுடன் (எங்களுடன்) இதுபோன்ற எந்த உடன்பாட்டையும் செய்துகொள்ளவில்லை. மேலும், என் அகல்யா நாடகத்தையும் சேர்த்து மொத்த ஐந்து நாடகங்களையும் அச்சிட்டு விற்பனை செய்து கொண்டிருக்கிறது, எனக்குத் தெரியாமலும், நான் அறியாமலும்.

‘தெரிவு' என்று பெயர் கொண்ட இந்த நாடகத் தொகுதியின் முதல் பதிப்பு, 2006 ஆம் ஆண்டு 2000 பிரதிகள் அச்சிட்டு விற்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, 2008 ஆம் ஆண்டுக்குள், திருச்சி பாரதிதாசன் பல்கலையில் இந்த நாடகத் தொகுதியை பட்ட வகுப்புக்குப் பாடத் திட்டமாக்கி இருக்கிறார்கள். அதை முன்னிட்டு, 22000 பிரதிகள் அச்சிடப்பட்டு விற்பனையில் இருக்கிறது. மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்த இந்த முறைகேட்டை, 2008 இன் நடுப்பகுதியில் தான் நான் அறிந்தேன். ‘தெரிவு' தொகுதியின் இரண்டாம் பதிப்பும் 2008 - இல் நான் அறியாமலேயே நடந்தது.

இப்படி ஒரு மெகா ஊழல் நடைபெற்றுக் கொண்டிருப்பதை, நண்பர் வளர்மதியின் மூலம்தான் முதன் முதலாக நான் அறிந்தேன். என் புரிதலுக்குள் இந்தச் செய்தி வந்து சேர்ந்தபோது, இதன் பரிமாணத்தை அதன் முழு விஸ்தீரணத்துடன் நான் விளங்கிக் கொள்ளவில்லை. அடுத்தடுத்து நிகழ்ந்த பல நிகழ்ச்சிகள், கள்ளக்கடத்தல் வியாபாரிகளைவிடவும் இவர்கள் மோசமானவர்கள் என்பதை எனக்குணர்த்தின.

ஓவியர் ஆதிமூலத்தின் ஓவியத்தை [பிரதியெடுத்து கள்ளத்தனமாக விற்பனை செய்துகொண்டிருப்பது தொடர்பாக நடந்த கூட்டத்தில் இது பற்றி நான் வெளிப்படையாகப் பேசினேன். பிறகு மற்றொரு எழுத்தாள நண்பர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த என். சி. பி. எச். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி துரைராஜ், என். சி. பி. எச் பதிப்பகத்]*துக்காக என்னிடம் புத்தகம் கேட்டார். நான் பாவை பதிப்பக ஊழலைப் பற்றிக் கேட்டேன். அவர், “நான் பதவிக்கும் பொறுப்புக்கும் வருவதற்கு முன்னால் அது நடந்திருக்கும். நான் விசாரிக்கிறேன்” என்றார். விசாரித்துக்கொண் ... டே ... இருந்தார்.

புதுச்சேரியின் விடுதலையின் ஒப்பற்ற தலைவரும், புதுச்சேரி மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தவருமான மாபெரும் போரளி தோழர் வ. சுப்பையா அவர்களால் கவரப்பட்டே இடதுசாரிகளின் இலக்கியங்கள் பக்கம் திரும்பினேன். மார்க்சியத்தையும் ஓரளவு கற்றேன். என் தொடக்க காலச் சிறுகதைகளை வெளியிட்டது தாமரை. கடந்த நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுக் காலமாகவே இடதுசாரி இயக்கங்களோடும், அவர்களது கலை பண்பாட்டு இயக்கங்களோடும்தான் நான் இருக்கிறேன். மாதத்தில் ஓரிரண்டு முறைகளாவது சி.பி.ஐ. யைச் சேர்ந்த திரு. நல்லகணு, தோழர் மகேந்திரன் போன்றோரை இலக்கியம் சார்ந்த மேடைகளில் நான் சந்திக்க நேர்வதுண்டு. குறிப்பாக, நல்லகண்ணு, அவ்வப்போது என் கட்டுரைகளைப் பற்றித் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிப் பேசியதும் உண்டு. ஒருபக்கம் இப்படியான நட்பை வளர்த்துக் கொண்டும், மறுபக்கம் என் நாடகத்தைத் திருடிப் பதிப்பித்துச் சுரண்டிக் கொண்டும் இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தலைவராகவும் இருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று என்பதே என் குழப்பமாக இருந்தது.

அரசியல்தளம், பண்பாட்டுத்தளம், இயக்கக் கட்டுமானத்தில் இருக்க வேண்டிய நெறிமுறைகள், தனிமனித வாழ்நெறிகளில் கடைப்பிடிக்க வேண்டிய அறம்சார் விழுமியங்கள் என்பதெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இருக்க வேண்டியவை. கம்யூனிஸ்டுகளால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் இது அவசியம்.

என்மேல் அன்பு கொண்ட புதுச்சேரி சி.பி.ஐ. சட்டமன்ற உறுப்பினர் தோழர் விசுவநாதன், நல்லகண்ணு அவர்களுடன், பாவை பதிப்பகச் சுரண்டலைப் பற்றிப் பேசினார். நானும் நல்லகண்ணுவுடன் பேசினேன். அதன்படி, ஒரு குறிப்பிட்ட நாளில், தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இது குறித்த பஞ்சாயத்துக்கு ஏற்பாடாயிற்று. பாவை பதிப்பகச் சுரண்டலுக்காளான நான், வளர்மதி, எஸ். பொன்னுதுரை ஆகியோர் கலந்து கொண்டோம். எங்கள் நண்பரும், புகழ் பெற்ற ஊடக இயலாளருமான கஜேந்திரன் அவர்களும் பார்வையாளர்களாக இருந்தார். பாவை பதிப்பகம் சார்பாக துரைராஜும், இன்னொரு நபரும், நல்லகண்ணுவும் இடம் பெற்றார். பாவை பதிப்பகத்தின் கெளரவத் தலைவர் நல்லகண்ணு.

நல்லகண்ணுவிடம் நான் மிகக் கடுமையாகவே பேசினேன். ”முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்டினால் நாம் கொடி பிடிப்போம். நீங்கள் கொடி பிடிப்பீர்கள். கோஷம் போடுவீர்கள். நீங்களே எழுத்தாளர்களைச் சுரண்டலாமா” என்று தொடங்கி, எத்தனை காலம் இப்படி எழுத்தாளர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள், தமிழின் மூத்த எழுத்தாளர் முதல் என் வரை எத்தனை பேரைச் சுரண்டி இருப்பீர்கள் என்பது போன்ற பல கேள்விகளை நல்லகண்ணுவிடம் நான் கேட்டேன். தான் தலைமை ஏற்று நடத்தும் ஒரு நிறுவனத்தின் மேல், நான் வைக்கும் குற்றச்சாட்டுகள் நல்லகண்ணுவை வெட்கமடையச் செய்திருக்க வேண்டும். கோபப்படுத்தி இருக்கவேண்டும். இல்லை. சாந்த சீலராக, எல்லாம் சிவமயம் என்பதுபோல அவர் இருந்தார். எங்கள் நாடகங்களைக் களவாடி பாவைக்குக் கொடுத்த அந்தப் பேராசிரியர்கள் பற்றிக் கல்லூரி முதல்வர்கள், பல்கலை, உயர்கல்வித்துறை அமைச்சர், துணை வேந்தர்களிடம் நான் புகார் செய்ய இருப்பதைச் சொன்னபோது, நல்லகண்ணு, வாய்திறந்து, “அவர்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிடாதீர்கள்” என்று கெஞ்சும் தொனியில் கேட்டுக் கொண்டார். இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்த அந்த நேர்ப்பேச்சில், மூன்று முறைகளுகு மேல் இதை அவர் திருப்பித் திருப்பிச் சொன்னார். அப்போதுதான் என் சந்தேகம் வலுப்பட்டது. அந்தப் பேராசிரியர்களும், இந்தப் பதிப்பகமும் சேர்ந்தேதான் ‘கருத்தொருமித்த காதலர்களாக' இயங்குகிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது.

நல்லகண்ணு முதலான பாவை பதிப்பகத்தின் இயக்கச் சக்திகள், பதிப்பக நெறிமுறைகளுக்கு மாறான இந்தச் செயலைச் செய்த சம்பந்தப்பட்ட பொறுப்பாளரின்மேல் ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா என்றால், அப்படி ஒரு தகவலும் இல்லை. அந்தப் பேராசிரியர்கள் நால்வரையும் ஒருங்கிணைத்து, படைப்புகளைக் களவாடச் செய்து, அதைப் பதிப்பகத்திடம் சேர்த்து, அச்சிட்டு விற்கிற, இந்தக் காரியத்தை முன்நின்று செய்த அந்தக் 'கங்காணி' யார் என்பது நல்லகண்ணுவுக்கோ இயக்குநர்களுக்கோ தெரியாதா? தெரிந்தும், அந்த இழிசெயலாளன்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமைக்கு என்ன காரணம்? பதிப்பகத்தின் 'புகழுக்கு' மாசு கற்பித்த அந்த மனிதருக்கு எதிராக நீங்கள் நடவடிக்கை எடுக்காமைக்குக் காரனம், இது மாதிரியான முறை மீறல் மற்றும் சட்ட மீறல் உங்கள் கும்பினியின் வழக்கமாக இருக்கிறது, அதனால் அந்த ‘புரட்சிகரமான நடைமுறையே' நீடிக்கட்டும் என்று நீங்கள் வாளாவிருந்துவிட்டீர்கள் என்று நான் கருதலாமா?

ஆக, நல்லகண்ணு முன்னிலையில் நடந்த அந்தப் பஞ்சாயத்தின் முடிவில், தெரிவு நாடக நூலின் முதல் பதிப்பு 2000 பிரதிக்கும், இரண்டாம் பதிப்பு 22000 பிரதிகளுக்கும் பத்து சதம் ராயல்டி தொகையை, நாடக ஆசிரியர்கள் ஐந்து பேருக்கும் பிரித்து அளிப்பது என்று முடிவாயிற்று. அதன்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ‘செக்' அனுப்பப் பெற்றது. நான் எனக்கான ராயல்டியைப் பெற்றுக் கொண்டேன். எஸ். பொன்னுதுரையும் அவருக்கான ராயல்டியைப் பெற்றுக் கொண்டார். தி. சு. இளஞ்செழியன், காஸ்யப ஆகியோருக்குப் பணம் சேர்ந்ததா என்பது எனக்குத் தெரியாது.

எழுத்தாளர் வளர்மதி, பணத்தை ஏற்கவில்லை. பஞ்சாயத்தின்போது,"ராயல்டி தொகையோடு, திருட்டுத்தனம் செய்த குற்றத்துக்கான தண்டனையாக ஒரு குறிப்பிட்ட தொகை சேர்த்துத் தரப்பட வேண்டும்" என்று நல்லகண்ணுவிடம் அவர் சொன்னார். நல்லகண்ணு அதை ஏற்கவில்லை. ஏற்காதது மட்டும் அல்ல, சீற்றத்துடன் மறுத்தார்.

ஆக, படிப்பும் எழுத்தும் என்று முழு நேரமாக வாழும் ஒரு எழுத்தாளனின் ரத்தம் இவ்வாறு பருகப்பட்டது. வளர்மதி அவருக்கான நீதியை நீதியின்படி பெறுவார், பெறவேண்டும்.

இலாப நோக்கம் மட்டுமே கொண்ட ஒரு புத்தக வியாபாரி, தன் கடையை நடத்துவது போல கம்யூனிஸ்ட்டுகள் செய்ய முடியாது. என்னைப் பொருத்தவரை கம்யூனிஸ்ட் என்பவர் சமூக முன்மாதிரி மனிதர். நிலவுடமை மற்றும் முதலாளித்துவக் கலாச்சாரத்துக்கு மாற்றாகவே கம்யூனிஸ்ட்டுகள் அனைத்து வகையிலும் செயல்படவேண்டும். செயல்பட்டால்தான் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ஒரு புத்தக வியாபார ஸ்தானத்து ஆட்களின் கழுத்தில் துண்டைப் போட்டு ராயல்டி பெறுகிற நிலைமைக்கு அவர்கள் ஒரு எழுத்தாளனை ஆக்கிவிட்ட கசப்புணர்ச்சி மேலோங்க, நான் இந்தச் சம்பவத்தை மறந்துபோனேன்.

ஆனால் அவர்கள் என்னை மறக்கவிடவில்லை.

தெரிவு புத்தகத்தைப் பாட நூலாக்கிய பேராசிரியர்களுக்கு எதிராகச் சிலர் இருப்பதாகவும் அவர்கள் அகலிகை நாடகம் ஆபாசமாக இருப்பதாகவும் சொலி திருச்சிப் பல்கலை மாணவர்களைத் தூண்டிவிட்டார்கள் என்று எனக்கு ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் கிடைத்தது. அதுபற்றி நான் கேட்கவில்லை. அகலிகை நாடகத்தைப் பாட நூலாக்கச் சொல்லி நான் கேட்கவில்லை. பாவைக் கூட்டம் அதைப் பாட நூலாக்கிய முயற்சியில் என் சம்மதத்தைக் கோரவில்லை. என் அனுமதி இன்றியே என் படைப்பைப் புத்தகம் போட்டு விற்றவர்கள் அனுமதி கேட்பார்களா என்ன?

ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த மாணவர் பெருமன்றத்து ஆட்களே அகலிகை நாடகம் ஆபாசம் என்று சொல்லிப் போராட்டம் செய்திருக்கிறார்கள். அதாவது மாணவர் பெருமன்றம், தான் சார்ந்த அரசியல் கட்சி நடத்தும் புத்தக நிறுவனம் பதிப்பித்த புத்தகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த விசித்திரம் எப்படி நடந்தது? மாணவர் பெருமன்றத்தின் இந்த நடவடிக்கைகளுக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது என்ற சந்தேகம் எனக்கு இயல்பாக ஏற்படுகிறது. கட்சித் தலைமை என சொல்கிறது? பெருமன்றச் செயல்பாடு சரி என்கிறதா? தவறு என்றால், கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது?

இதில் நல்லகண்ணுவின் கருத்து என்ன?

இலக்கியத்தில் ஆபாசம் என்கிற பிரச்சினை ஆதாம் ஏவாள் காலத்தது. இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருப்பது வீண் வேலை. தொட்ட இடம் எல்லாம் ஈரம் சொதசொதக்கும் அல்குலையும், முலைகளையும் சங்க இலக்கியத்தில் மாணவர்கள் படிப்பதில் அவர்களுக்கு ஆட்சேபணை இல்லை. நான் ஸ்தனம் என்று எழுதியது மட்டும்தான் ஆபாசமாகிவிட்டது. கற்பு, புனிதம், ஒழுக்கம் என்பவற்றின்பேரில் கட்டமைக்கப்பட்ட சில கருத்துகளின்மேல் நான்சில கேள்விகள் எழுப்பியுள்ளேன். அவ்வளவுதான். இலக்கிய நோக்கமும் சமூக உணர்வும், கலைச் சிறப்பும் கொண்ட பிரதிகள், எதிர்வினையை ஏற்படுத்தவே செய்யும்.

திருச்சி பல்கலைத் துணைவேந்தருக்கு நான் ஒரு கருத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு நூல். பாடப்புத்தகமாக வைக்கப்பட சில அறிஞர்கள் பரிந்துரைக்கிறார்கள். அந்தப் பரிந்துரை அடிப்படையில் அந்நூல் பாடமாகிறது. அந்தப் பரிந்துரைகளில் கேள்வி எழுந்தால், தாங்கள் என்ன செய்வீர்கள்? மீண்டும் பரிந்துரைத்த அறிஞர்களிடம் தடைகளைச் சொல்லி விளக்கம் கேட்கலாம். அதை எழுதிய எழுத்தாளன் என்ற முறையில் என்னிடமும் விளக்கம் கேட்கலாம். இது, அந்த நாடகம் ‘ஆபாசம்' என்பதன் கீழ் வராது என்பதைக் கூறத்தான். நூல் வெளியீடு தொடங்கி, பாடப் புத்தக சர்ச்சை வரை எல்லாமே தவறுகளும் முறை மீறல்களுமாக இருப்பதால், அகலிகை நாடகத்தைப் பாடப் புத்தகத்தில் இருந்து எடுத்து விடுவதுதான் சரி என்பது என் முடிவான யோசனை. தங்கள் மேலான முடிவுக்கு இதை விடுக்கிறேன். மேலும், அகலிகையைப் பாடமாக்க நான் யாருக்கும் அனுமதி தரவில்லை.

நான் மதிக்கும் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன், என் அகலிகை நாடகம், பாவை பதிப்பகம், பதிப்பு முதலான பல விஷயங்கள் பற்றி பிப்ரவரி 2009 காலச்சுவட்டில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதற்கு எதிர்வினை என்ற பெயரில் முருகேசன் என்பவர் ‘உங்கள் நூலகம்' இதழில் ஒரு பக்கத்தில் பதில் எழுதி இருக்கிறார். அதில் கருத்துக்களுக்கு பதில் என்பதற்கு மாறாக அவர்களின் கலாச்சாரத்தின்படி பெருமாள் முருகனை இழிவுபடுத்தி இருக்கிறார்.

1. 'பெருமாள் முருகன் அவர் புத்தகங்களைப் பாடமாக்கப் பல பல்கலைக்கு ஏறி இறங்கி நிராகரிக்கப்பட்டார்' என்பது முருகேசன் கட்டுரையில் ஒரு வரி.

பெருமாள் முருகனின் படைப்புகள், இலக்கியம் சார்ந்த அவரது செயல்பாடுகள், வாழ்முறை தெரிந்தவர்கள், இந்த இழிவான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மட்டுமல்ல, இது ஒரு கேடுகெட்ட கேவலமான சேறடிப்பு வேலை என்றே கருதுவார்கள். பெருமாள் முருகன் மேல் எவரும் எதன் பொருட்டும் குற்றம் சொல்ல முடியாது.

2. பாவை பதிப்பக வருவாயில் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன? என்கிறார் கட்டுரையாளர்.

வாழட்டும். வாழவேண்டும் என்பதே நம் விருப்பமும்கூட. பாவை பதிப்பக ஊழியர்கள் நல நிதிக்காக நான் ராயல்டி பெறாமல் புத்தகம் தரத் தயாராக இருக்கிறேன். அந்த விற்றுவரும் பணத்தைத் தொழிலாளிக்கே தருவோம் என்று நீங்கள் உத்தரவாதம் தரத் தயாரா? முதலில் உங்கள் ஸ்தாபனங்கள் சேர்த்து வைத்திருக்கும் பெரும் தொகையைத் தொழிலாளிகள் நலம் சார்ந்து செலவிட எத்தனை கோடிகளை ஒதுக்கத் தயாராகிறீர்கள்?

தொழிலாளர்கள் குடும்பங்களை வாழவைக்க, எழுத்தாளர்களின் உரிமைகளைத் திருடலாம் என்று எந்த மார்க்சியம் சொல்கிறது?

3. தெரிவு நாடகத் தொகுப்புக்காக அதன் தொகுப்பாளர்கள் ஒரு ரூபாய்கூடப் பெறவில்லை என்கிறார் கட்டுரையாளர்.

ஒரு ரூபாய் கூடப் பெறாத அந்தத் தியாகிகள், எழுத்தாளர்களின் உரிமையைக் கோரிப் பெற்று அத்தொண்டைச் செய்வதில் என்ன தடை கண்டார்கள். பிரச்சினை என்று வந்தபின் அந்தப் பேராசிரியர்களைக் காப்பாற்றும் பொருட்டு நீங்கள் கட்டுரைக்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு ரூபாய்கூடப் பெறாமல், அத்தொகுப்பைத் தயாரிக்க என்ன காரணம் அவர்களைத் தூண்டியடு? இலக்கிய நோக்கம்தான் என்றால், திருடுவது இலக்கியப் புறம்பு என்பதை அவர்கள் அறியார்களா என்ன?

4. பிரபஞ்சனைக் குஷிப்படுத்தும் நோக்கம் பெருமாள் முருகனுக்கு என்கிறார் கட்டுரையாளர்.

என்னைக் குஷிப்படுத்தும் நோக்கம் பெருமாள் முருகனுக்கு ஏற்பட எந்த அவசியமும் இல்லை. ‘குஷிப்படுத்துதல்' என்பது போன்ற பார்வையும் பாவை சார்ந்த இயக்கத்துக்கே உரிய கயமை சர்ந்த சொற்களை இடம் மாற்றிப் பெய்கிறார் கட்டுரையாளர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்த தலைவரிடம் அச்செய்கைக்குச் சொல்ல வேண்டிய வார்த்தை அது. இதனால் ஜெயலலிதா மகிழ்ச்சியடைவதைவிடவும், உங்கள் தரத்தைக் குறித்தே உங்களை அடையாளப்படுத்திக் கொண்டமைக்காக அவர் கூடுதலாக மகிழ்வார். உங்களைக் காட்டிலும் கூடுதலான நுணுக்க அறிவு உடையவர் அவர்.

தமிழக்த் துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள், உயர் கல்வி அமைச்சர் ஆகியோரிடம் எனக்குச் சொல்ல ஒன்றுண்டு.

எழுத்தாளர்களிடம் உரிமை பெறாமல், அவர்கள் படைப்புகளைக் களவடிப் புத்தகம் போடுகிற பேராசிரியர்கள் மேல் உங்கள் நடவடிக்கை என்ன? ஆண்டுதோறும் அவர்களிடம் பயில்கிற நூற்றுக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் பற்றியே நான் கவலைப்படுகிறேன்.

எழுத்தாளர்களின் அனுமதி பெறாமல் அவர்கள் நூல்களைப் பல்கலைகளில் பாடப் புத்தகமாக்குவது அறம் இல்லை என்று நீங்கள் உணர்வீர்கள் என்றால் அப்பதிப்பகங்களின் நூல்களை உடன் தடை செய்யுங்கள். அப்பதிப்பகங்களின் நூல்களை (அவை திருடப்பட்டவை) என்பதால் இனிமேல் அவர்களின் பதிப்புகளை பாடமாக்குவதில் மிகுந்த கவனம் வையுங்கள்.

ஒரு பதிப்பாளர், அவரது புத்தகத்தைப் பாடமாக்க மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒவ்வொரு படியிலும் ஊழல் நேர்ந்துவிடாமல் கவனம் வையுங்கள்.

பாடமாக்கும் பரிசீலனைக் குழுக்களில் எழுத்தாளர்களும் இடம் பெற ஏற்பாடு செய்யுங்கள். அந்த எழுத்தாலர் அப்பதவி வகிக்கும் காலங்களில் அவரது புத்தகம் பாடப் புத்தகமாகாமல் இருக்கச் சட்டம் இயற்றுங்கள்.

இரண்டு நோக்கங்களை முன்னிருத்தி இக்கட்டுரையை நான் எழுதினேன்.

1. கல்விப் புலத்துக்கும் படைப்புப் புலத்துக்கும் புரிந்துணர்வும், மரியாதையுடன் கூடிய தோழமையும் நிலவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதைச் சில வியாபாரிகள் கெடுத்துவிடக்கூடாது என்றும் நான் கவலைப்படுகிறேன். பேரறிவும் பேருழைப்பும், மாணவர் பால் மிகுந்த அன்பும் கொண்ட பல பேராசிரியர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களின் மரியாதை, சில போலிகளால் வீழ்ச்சியடைந்துவிடக்கூடாடு என்ற கவலையால் இதை எழுதினேன்.

2. இயக்கங்களின்பாலும், கலை இலக்கிய அமைப்புகளின் மேலும் ஈடுபாடு கொண்டு நுழையும் புதிய இளைஞர்கள் விழிப்படைய வேண்டும் என்பதும் என் நோக்கம். அதோடு, எழுத்தாளர்கள், இத்தகைய பதிப்பகங்களை நிராகரிக்க வேண்டும் என்பதும் என் வேண்டுகோள்.

Jun 15, 2009

சிங்கள அரசு பிணக்குவியலின்மேல் ஈட்டிய வெற்றி

அபயசேகரா நேர்காணல் தொடர்ச்சி:


More at The Real News



http://therealnews.com/t/index.php?option=com_content&task=view&id=31&Itemid=74&jumival=3849

Jun 14, 2009

ஈழத்தில் தடுப்பு முகாம்களின் நிலை குறித்து

ஈழத்தில் தடுப்பு முகாம்களின் நிலை குறித்து சுனிலா அபயசேகராவின் நேர்காணல்.



More at The Real News


http://therealnews.com/t/index.php?option=com_content&task=view&id=31&Itemid=74&jumival=3858

Jun 9, 2009

என்னமோ நடக்குது!

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

கணக்குல நா வீக்; இப்படி நம்பரை கண்ட மேனிக்கு மாத்தி கேள்வி கேட்டா என்னத்த சொல்லுறது? ஒரு மண்ணும் புரியல போங்க ...

முதல் ( ... கடைசி ... அடக் கொடுமையே) கேள்விக்கே எஸ்கேப்பான்னு சிரிக்கறவங்களுக்கு சீரியஸா ஒரு பதில்:

வாழ்வு என்பது வ்+ஆ(வா) + ஊழ்வு (அல்லது உழவு அல்லது இழவு) என்றே இச்சொல் தொடங்குவதால் இதை வ்வாழ்வு என்றே சொல்ல வேண்டும். வ்வாழ்வு என்பது இவ்வாழ்வு (உச்சரித்துப் பார்க்க). ஆக, இவ் + ஊழ்வு எனக் கொண்டால் ஊழ்வினையின் பயனே இவ்வாழ்வு. உழவு எனக் கொண்டால் உழுதுண்டு வாழ்வோரே வாழ்வர். இழவு எனக் கொண்டால் என்ன எழவுடா இந்த வ்வாழ்வு எனக் கொள்ள இடமுண்டு.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இளிச்சவாயன்னு பலபேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எதையோ நினைச்சு எதையோ செய்யப் போக கடைசியில வம்புல மாட்டிக்கிட்டு உதார் விடுறதே வாடிக்கையாப் போச்சு. சரிடாப்பா இதுதான் உனக்குப் பொருத்தமான பேருன்னு (வினையானதொகை) வச்சுக்கிட்டது.

ஊறுகா மாதிரி (வினைத்தொகை) தொட்டுக்க ஒரு ஆளுன்னுட்டும் (வளர்மதி) வச்சிக்கிட்டது.

காரண இடுகுறிப்பெயர் (அப்படீன்னா என்னன்னு கேக்காதீங்க ... சொல்லிட்டேன்) அப்படீங்கறதால ரொம்ப ரசிச்சு ரசிச்சு புளகாங்கிதம்தாம் போங்க.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

ECR ரோட்டில் சுத்துமுத்தும் ஆள்வாசனை இல்லாத ஒரு பண்ணை வீடு. நீச்சல் குளம். குளக்கரையில ஃபாரீன் மதுப்புட்டிகள் (ஒன்னு ரெண்டு கவுந்திருக்கோனும்) குளத்துக்குள்ள பரந்த மிதவை ஒன்னு. குறைஞ்சது நாலு பெண்கள் (பெண்கள் மட்டும்). இப்படி இப்படி ...

21.பிடித்த பருவ காலம் எது?

மழை பேஞ்சா ஜல்ப்பு புடிச்சுக்கும். மே மாசத்துல வெயிலடிக்கும். எப்படியா இருந்தாலும் மொட்ட மாடிக்கு போக முடியாது ...

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

'காமிராக்' கண்ணன் எடுத்த “ஜம்பு” மாதிரி (பக்கத்து வூட்டுக்காரருங்கோ).

6.கடலில் குளிக்க பிடிக்குமா... அருவியில் குளிக்க பிடிக்குமா?

ஏஞ்சாமி மெட்ராசுல பொறந்து வளந்த ஆளிட்ட இப்படியெல்லாம் கேக்கலாமா?
காக்காக் குளியல விட்டா என்ன மண்ணாங்கட்டி தெரியும் என்ன மாதிரியான ஜென்மங்களுக்கு?

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

க்ளிக் ... க்ளிக் ... சிகரெட் பத்த லைட்டர் அழுத்தும் சத்தம் (எங்களாலயும் சவுண்டு எழுப்ப முடியுமில்ல).

மார்கழி மாசத்துல நடுராத்திரி இந்த நாயுங்க வுடற ஊள இருக்கே (கடுப்புதான்).

18.கண்ணாடி அணிபவரா?

+ - எந்தப் பிரச்சினையுமில்ல. பந்தாவுக்கு ரெண்டு வச்சிருக்கேன். 1000 ரூபாய்க்கு குறைச்சலா இதுவரைக்கும் வாங்குனதில்ல. ஒன்னு கூலிங் கிளாஸ். ஒரு தபா ஒரு நண்பன் "blind மாதிரி இருக்கடா"ன்னு சொல்லிட்டான். அதுக்கப்புறம் அதப் போடறதில்ல (கம்மணாட்டிக்கு “ராஜ பார்வை” கமல் மாதிரி இருக்கடா மாப்புன்னு சொல்ல மனசு வரல்ல பாருங்க - வேற யார் புளிப்பு பேச்சாவது ஞாபகம் வந்துச்சுன்னா சிலேட்ட எச்ச துப்பி அழிச்சிடுங்க)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

எந்தப் பாதியக் கேக்குறீங்க? மேல் பாதியா கீழ் பாதியா? இடமா வலமா? (எது கெடச்சாலும் ஓகே).

14.பிடித்த மணம்?

இவ்ளோ ச்ச்ச்சுருக்கமா கேட்டுப்புட்டீங்க!!!

ஏஞ்சாமி திருவிளையாடல் படம் பாக்கல்லையான்னு கேக்குறேன்!

17. பிடித்த விளையாட்டு?

கில்லி. (கில்லியில "ரிங்க்" தெரியுமா? மாட்டுன ஆள ‘கஞ்சி' காச்ச வக்குறது தெரியுமான்னேன்!)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இப்படி இத்தனை கேள்வி வுடாம கேக்குறது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

“அம்மையும் அப்பனும்.” (சுற்றுலான்னா சுத்தி சுத்தி வர்றதுதானே?)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அய்யா சாமி ... பல பேரோட சகவாசம் முடிஞ்சதுல ரொம்ப நிம்மதியா இருக்கேன். எதுக்கு இப்படி கோத்து விடப் பாக்குறீங்க?

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

எதாவது சொல்லித் தொலைக்கப் போறேன் ... ("ஏன்னு கேக்க பொண்டாட்டி இல்லையாம் ..." பழமொழிதான்).

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஒரு நாலு வருஷத்துக்கு முன்ன உங்க ஃபோன் நம்பரக் குடுத்துட்டு கேட்டிருந்தீங்கன்னா ராத்திரி 12 மணிக்கு மேல (சாத்தான) அனுபவிச்சிருப்பீங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கேள்வியில் தெளிவில்லை. ஆணா பெண்ணா? ஆடா, மாடா, கழுதையா குதிரையா? (எப்பிடி!)

4.பிடித்த மதிய உணவு என்ன?

No way. Mostly "brunch".

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

ஒரே கேள்விய ரெண்டு தபா கேட்டா இன்னா பண்ணுறது?

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஏமாந்ததெல்லாம் போதும் நைனா ... எஸ்கேப்.

2.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

“என்னப் பாட்டுப் பாட
என்ன தாளம் போட
வண்டி ஓடும் சத்தம்
பாட்டுக் கேக்கும் சந்தம்
நிக்காத ஓடு
இது சர்க்காரு ரோடு ...
ஏய் ... ஏய் ... ”

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

No tops. பட்டாப் பட்டி இல்ல. ஆனா டிரவுசர் கலர் மப்புல சரியா சொல்லத் தோணல. சாரி.

20.கடைசியாகப் பார்த்த படம்?

ஜூது (Casino).

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சரியா ஞாபகமில்ல. ஒரு மூனு மாசத்துக்கு முன்ன, ஓவரா அடிச்சு ஒரு நண்பரிட்ட “மக்கா, என்ன எப்பிடிப்பா நல்லவன்னு கண்டுபுடிக்குறாங்க”ன்னு பெரிய ஒப்பாரி வச்சேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

"நான் பைத்தியமா - ஒரு விளக்கம்" (பதிவு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் காட்ட முடியாது).

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

“மாறும் என்ற சொல்லே மாறாதது” (தத்துவம் ... தத்துவம் ... டே ... எப்பிடிடா நீ இப்பிடி?)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

வலிக்குது ... கை (வேறு அர்த்தங்கள் கற்பித்துக் கொள்பவர்களுக்கு மறுப்பு எழுதும் நிலையில் இல்லை).

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

போதுஞ்சாமி ... ஆள விடுங்க.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தெருமுக்கு (முட்டுச்சந்து) ... தம்மடிக்க ...

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கிறுக்கிட்டுப் போங்கடே (ஆசிஃப் அண்ணாச்சி மன்னிச்சிடுங்க) அப்படீன்னு விட்டுடுவேன்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

“அலிபாபாவும் சில ஊதுபத்திகளும்”. (டிடெக்டிவ் நாவல் - திருடன வுட்டுக்கொடுத்த கதை).

Jun 6, 2009

நாடக வெளி

நூல் விமர்சனக் கூட்டம்

நாடக வெளி சார்பாக

வெளி ரங்கராஜனின் "நாடகம் நிகழ்வு அழகியல்" நூல் விமர்சனக் கூட்டம்

பங்கு கொள்வோர்:

ந. முத்துசாமி

அ. மங்கை

சங்கர ராமசுப்ரமண்யம்

அம்ஷன்குமார்

வளர்மதி

குமரன்வளவன் (இந்தியா நோஸ்ட்ரம் தியேட்டர்)

பாரவி

உபேந்திரா (நிநாசம், கர்னாடகா)

07.06.2009 ஞாயிறு மாலை 6 மணி

சென்னை மத்திய நூலகக் கட்டிடம்

கருத்தரங்க அறை

அண்ணா சாலை, சென்னை - 02.

தொடர்புக்கு: 9444818922